தணிக்கை குழுவில் இருந்த ஒருவரே ஜன நாயகனுக்கு எதிராக புகார்.. நீதிமன்றம் சரமாரி கேள்வி.. சென்சார்?
சென்னை: இயக்குநர் அ.. வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. அரசியல் களத்தில் நுழையும் விஜய்யின் இறுதிப் படம் என்பதால், அவரது படத்துக்கு மீண்டும் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
'ஜனநாயகன்' பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் தணிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 19 அன்று படத்தை ஆய்வு செய்த தணிக்கைக் குழு, சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கப் பரிந்துரைத்தது. மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும், படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

'ஜனநாயகன்' படத்திற்குக் வேண்டுமென்றே தணிக்கை சான்றிதழ் மறுக்கப்படுவதாக தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், நிர்மல் குமார் உட்பட பலர் குற்றம்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, உடனடியாக சான்றிதழ் வழங்கக் கோரி, கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
கே.வி.என். புரொடக்சன்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பி.டி. ஆஷா முன்பு அவசர முறையீடு செய்தார். தணிக்கை வாரியம் 'யுஏ' சான்றிதழ் தருவதாகக் கூறிவிட்டு, பின்னர் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதாக தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டியது.
தணிக்கை வாரிய வழக்கறிஞர் விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கக் கோரினார். இதை மறுத்த நீதிபதி பி.டி. ஆஷா, வழக்கை அன்றே ஒத்திவைத்து, 'ஜனநாயகன்' படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இன்று மதியம் நீதிபதி பி.டி. ஆஷா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "தணிக்கைக் குழுவில் உள்ள ஒருவரே படத்தின் மீது புகார் அளித்தார்" எனத் தணிக்கை வாரியம் தெரிவித்தது. அதற்கு நீதிபதி, "யுஏ சான்றிதழுக்கு ஒப்புதல் வழங்கிய குழுவில் இருந்தவர் எப்படித் தனியே புகார் அளிக்க முடியும்?" என வினவினார்.
பதிலளித்த தணிக்கை வாரியம், "பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றத்தின் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாக பதிலளிக்கப்படும். மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறப்படும் புகார் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" எனவும் வாதிட்டது.
மேலும், "'ஜனநாயகன்' படத்தில் பாதுகாப்புப் படையினரின் அடையாளங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தை மறு ஆய்வுக்கு உத்தரவிட தணிக்கை வாரியத் தலைவருக்கு அதிகாரம் உண்டு" என நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் வாதிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜன நாயகன் படத்துக்கு இன்று தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே படம் திட்டமிட்டபடி 9ம் தேதி வெளியாகும் என்கின்றனர். வெள்ளிக்கிழமை வரை வழக்கை இழுத்தடித்தால் படம் அடுத்த வாரம் தான் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











