திஷா என்கவுன்டர்.. இயக்குனர் ராம் கோபால் வர்மா படத்துக்கு சான்றிதழ் தர சென்சார் மறுப்பு!
ஐதராபாத்: ராம் கோபால் வர்மா இயக்கிய திஷா என்கவுன்டர் படத்துக்கு சான்றிதழ் தர, தணிக்கை குழு மறுத்துவிட்டது.
பிரபல சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களை இயக்கி வருகிறார்.
இவர் இயக்கியுள்ள பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளன. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் இயக்குபவர் இவர்.

பாலியல் வன்கொடுமை
கொரோனா லாக்டவுனிலும் நேக்கட், க்ளைமாக்ஸ் ஆகிய கிளுகிளு படங்களை இயக்கி, தான் தொடங்கியுள்ள ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர், ஐதராபாத் அருகே உள்ள ஷம்சாபாத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவர் திஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுப்பதாக அறிவித்திருந்தார்.

என்கவுன்டர்
திஷா, கொடூரமாகக் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது போலீஸ். திஷா கொல்லப்பட்ட இடத்தில் இவர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

திஷா என்கவுன்டர்
இந்த சம்பவத்தை படமாக்க இருப்பதாகக் கூறினார் ராம் கோபால் வர்மா. இதற்கு திஷாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திஷா கதையை சினிமாவாக எடுக்கக் கூடாது என்று இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 'திஷா என்கவுன்டர்' என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்தை அவர் தயாரித்து முடித்துவிட்டார்.

மீண்டும் எதிர்ப்பு
இதை வர்மாவுடன் இணைந்து ஆனந்த் சந்த்ரா இயக்கியுள்ளார். ஶ்ரீகாந்த் ஐயங்கார், சோனியா அகுலா உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியாகி பரபரப்பானது. அதில் திஷா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் திஷா குடும்பத்தினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதையும் கேட்கவில்லை
இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும் தங்கள் தரப்பில் எதையும் கேட்கவில்லை என்றும் திஷாவின் பெற்றோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் முன்பு, திஷாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சான்றிதழ் மறுப்பு
இந்நிலையில் இந்தப் படம் தணிக்கைக்கு நேற்று சென்றது. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், ஷம்சாபாத் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அப்படியே காண்பிப்பது போல் இருப்பதால் சான்றிதழ் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ரிவைசிங் கமிட்டி
இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறி, ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி இருக்கிறது, ராம் கோபால் வர்மா தரப்பு. இதையடுத்து ரிவைசிங் கமிட்டி, படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்களின் 15 பிரதிகளை சமர்பிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











