விசாரணையை தொடங்கிய சிபிஐ... மும்பை போலீஸிடமிருந்து சுஷாந்தின் போன், லேப்டாப், டைரியை கைப்பற்றியது!
சென்னை: சுஷாந்தின் மரண வழக்கை விசாரிக்க தொடங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் மும்பை போலீஸாரிடமிருந்த அவரது லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
34 வயதே ஆன இந்த இளம் நடிகரின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் இருந்த கேங்க் அரசியலே அவரது மரணத்திற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குடும்பத்தினர் கோரிக்கை
சுஷாந்த் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மும்பை போலீஸ் விசாரணையில் திருப்தியடையாத சுஷாந்தின் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர்.

விசாரணை தொடக்கம்
இதனை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

உடனடி விசாரணை
இதனையடுத்து 10 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு மும்பைக்கு சென்றனர். சிபிஐ அதிகாரிகளை தனிமைப்படுத்தக் கூடாது என மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சிபிஐ அதிகாரிகள் உடனடியாக விசாரணை தொடங்கிவிட்டனர்.

இரண்டு குழுக்களாக
விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள் குழுவில் தடயவியல் நிபுணர்களும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு குழுக்களாக பிரிந்து வழக்கை விசாரிக்கின்றனர் சிபிஐ அதிகாரிகள். அவர்கள் மும்பை போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றனர்.

வீட்டில் இருந்த பொருட்கள்
அதன்படி மும்பை போலீசாரிடம் இருந்த மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் லேப் டாப், செல்போன், டைரி, போட்டோக்கள் மற்றும் சில டாக்குமென்ட்டுகளையும் சிபிஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர். சுஷாந்த் இறந்ததும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்த பொருட்களை சுஷாந்தின் உறவினர்கள் பீகாருக்கு எடுத்துச்சென்றதாக தெரிகிறது.

போலீஸ்க்கு கேள்வி
இதனால் தடயங்களை சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது போலீஸ் எப்படி சுஷாந்த்தின் உறவினர்களை பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீரஜிடம் விசாரணை
இதனிடையே சுஷாந்த் வீட்டின் சமையல்காரராக இருந்த நீரஜிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அளித்த தகவல்களை சிபிஐ அதிகாரிகள் ரெக்கார்டு செய்துள்ளனர். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட போது வீட்டில் இருந்த மூன்று பேரில் நீரஜும் ஒருவர் என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











