CCL 2025: சிக்ஸர் மழை பொழிந்த சென்னை ரைனோஸ்.. பயத்தில் பதுங்கிய பெங்கால் டைகர்ஸ்!
பெங்களூரு: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று முதல் அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்கால் அணியும் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட் செய்த பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் அதாவது முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 79 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக கலையரசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய சென்னை ரைனோஸ் அணிக்கு ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. சென்னை அணியின் இன்னிங்ஸை ரமணா மற்றும் ஷரன் தொடங்கினர். இதில் ரமணா ஆட்டத்தின் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இவரது அதிரடியான ஆட்டத்தினை பெங்கால் அணி ஸ்டார்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ரமணா மற்றும் ஷரன் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல், இவர்கள் விளையாடிய விதம் சென்னை அணியை நல்ல நிலைக்கு உயர்த்தியது. இதில் ரமணாவுக்கு, பரத், பை- ரன்னராக செயல்பட்டார். ஒரு பக்கம் ரமணா பவுண்டரிகளாக விளாசினார், ஷரன் சிக்ஸர்களாக விளாசினார். இவர்களது விக்கெட்டை எடுக்க முடியாமல் பெங்கால் டைகர்ஸ் அணியின் ஸ்டார்கள் திணறினார்கள். 5வது ஓவரின் கடைசிப் பந்தில் ஷரன் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் அப்போது சென்னை அணி 50 ரன்கள் சேர்த்திருந்தது.

விக்கெட்டுகள் சரிவு: அதன் பின்னர் 6வது ஓவரின் 2வது பந்தில் ரமணா தனது விக்கெட்டை பேட்-டிப் கேட்ச் முறையில் இழந்து வெளியேறினார். 50 ரன்களுக்கு சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் ப்ரித்திவ் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கைகோர்த்தனர். இதில் ப்ரித்திவ், ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தது போல், தான் எதிர்கொண்ட முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார். ஆனால் விக்ராந்த் சிக்ஸர் விளாச முயற்சித்து 7வது ஓவரில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

முன்னிலை: அதன் பின்னர் வந்த அஜய், தான் எதிர் கொண்ட பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். சீராக சென்னை அணி ரன்கள் உயர்ந்து கொண்டே இருந்தது. 9 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பெங்கால் அணியை விட 5 ரன்கள் முன்னிலைக்கு வந்தது. இறுதியாக சென்னை அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 90 ரன்கள் சேர்த்தது. இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் சென்னை அணி 11 ரன்கள் முன்னிலையில் முடித்தது. பெங்கால் அணி சார்பில் பந்து வீசிய ராகுல் இரண்டு ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











