CCL 2025: சென்னை ரைனோஸை நையப்புடைத்த கிச்சா சுதீப்பின் கர்நாடகா.. இமாலய வெற்றி!
ஹைதராபாத்: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றில் இன்று அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை ரைனோஸ் அணியும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை ரைனோஸ் அணியை, கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால், அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னை ரைனோஸ் அணியும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் தங்களது இரண்டாவது லீக் போட்டியில் மோதிக்கொண்டது. இதில் கர்நாடகா அணி தனது முதல் போட்டியில் தெலுகு வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. அதேபோல் சென்னை ரைனோஸ் அணி தனது முதல் போட்டியில் பெங்கால் டைகர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தது. இப்படியான நிலையில் இரு அணிகளும் மோதிக்கொண்டது.

போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் விக்ராந்த், பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணி தனது முதல் இன்னிங்ஸில் அதாவது முதல் 10 ஓவரில் 108 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் பேட்டிங் பார்க்கும்போது முந்தைய போட்டிக்கு பரவாயில்லை எனத் தோன்றினாலும் கர்நாடகா போன்ற பலமான அணிக்கு முன் போதுமானதாக இல்லை. முதல் இன்னிங்ஸில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது, ரன் ஓடுகையில், சென்னை அணி கேப்டனுக்கு காலில் காயம் ஏற்பட, அவர் ஆட்டத்தில் பாதியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அணியின் ஸ்கோர் குறைந்தது.
அசத்தல் கர்நாடகா: தனது முதல் இன்னிங்ஸில் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய கர்நாடகா அணி சென்னை அணியின் பந்து வீச்சை சிதைத்தது. கர்நாடகா புல்டோசர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டார்லிங் கிருஷ்ணா, 23 பந்துகளை எதிர்கொண்டு, 50 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸில் கர்நாடகா அணி, 4 விக்கெட்டுகளை இழந்து, 142 ரன்கள் குவித்தது. இதனால் சென்னை அணியை விட, 34 ரன்கள் முன்னிலை வகித்தது.

சொதப்பல்: அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சென்னை அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. காயம் பட்ட காலுடன், சென்னை அணி கேப்டன் விக்ராந்த் விளையாட வந்து, அதன் பின்னர், பாதியில் வெளியேறினார். சென்னை அணி சார்பாக கலையரசன் மற்றும், ப்ரித்திவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் சென்னை அணி 103 ரன்கள் சேர்த்தது. இதனால் கர்நாடகா அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
எளிமையான இலக்கு: பவர்ப்ளேவிற்குள் கர்நாடகா அணி 2 விக்கெட்டுகளை இழந்தாலும் எளிமையான இலக்கு என்பதால், கர்நாடகா அணி நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. கடைசி 6 ஓவர்களில் கர்நாடகா அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தது. 5வது ஓவரை சென்னை அணியின் சார்பில் பாரி வீசினார். அந்த ஓவரில் அவர் 4 வைய்ட் பந்துகளை வீசினார். இதனால் இந்த ஓவர் முடியும்போது கர்நாடகா அணியின் ஸ்கோர் 49 ஆக மாறியது. இதனால் அடுத்த 5 ஓவரில் கர்நாடகாவின் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே இருந்தது.

வெற்றி: இறுதியாக கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 6.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதனால் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கர்நாடகா அணி தனது அடுத்த சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. சென்னை ரைனோஸ் அணி தனக்கு உள்ள இரண்டு போட்டிகளிலும் இமாலய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை ரைனோஸ் அணி நாளை அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தெலுகு டைகர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications











