CCL 2025: கப்பு முக்கியம் பிகிலு.. யாரு பெருசுனு மோதி காட்ட போறாங்க.. வெற்றியுடன் தொடங்குமா சென்னை?
சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று முதல் அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படும் இந்தக் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகைச் சேர்ந்த 7 கிரிக்கெட் அணிகள் களமிறங்கியுள்ளது. அதாவது, தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, பஞ்சாபி, போஜ்புரி மற்றும் ஹிந்தி என மொத்தம் மொழித் திரையுலக நட்சத்திரங்கள் களமிறங்குகின்றது. இன்று முதல் தொடங்கும் இந்த தொடர் வரும் மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் நடப்புச் சாம்பியன் பெங்கால் அணியும் மோதவுள்ளது.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 10 சீசன் முடிவடைந்துள்ளது. இடையில் சில காரணங்களால், சில ஆண்டுகள் தொடர் நடத்தப்படவில்லை. இப்படியான நிலையில் இதுவரை நடைபெற்று முடிந்த 10 சீசனில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்றால் அது தெலுங்கு அணிதான். தெலுகு வாரியர்ஸ் அணி, மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. 2015, 2016, 2017 மற்றும் 2023 ஆகிய சீசன்களை தெலுகு வாரியர்ஸ் அணி வென்றுள்ளது. சிசிஎல் தொடரில் இந்த அணி தான் அதிக கோப்பைகளை வென்று மற்ற அணிகளை டாமினேட் செய்து வருகிறது.

சாம்பியன்கள்: அதன் பின்னர் அதிக கோப்பைகளை வென்ற அணி என்றால் அது, சென்னை அணியும் கர்நாடகா அணியும் தான். சென்னை அணி 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளிலும், கர்நாடகா அணி 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் ஹிந்தி அணியும் பெங்கால் அணியும் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளது. இதில் கோப்பை வெல்லாத அணிகள் என்றால், அது மலையாளம், போஜ்புரி மற்றும் பஞ்சாபி அணிகள்தான். இன்று முதல் தொடங்கும் இந்த சீசனில் மலையாள அணி கலந்து கொள்ளவில்லை.
முதல் போட்டி: நடப்பு சீசனில் முதல் நாளில் மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றது. முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்கால் அணியும் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் கர்நாடகா அணியும் தெலுங்கு அணியும் மோதுகின்றன. இரண்டு போட்டிகளும் பெங்களூரில் நடைபெற உள்ளது. இரு அணிகளில் எந்த அணி வெற்றியுடன் தங்களது பயணத்தை தொடங்க உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சென்னை அணி வெல்லும் என தமிழ்நாடு ரசிகர்களும் பெங்கால் அணி வெல்லும் என மேற்கு வங்க ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். வெற்றி ஒருவருக்குத்தான் என்பதால் யார் வெல்லப் போகிறார்கள் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
சென்னை அணி: நடப்புச் சாம்பியன் பெங்கால் அணி மிகவும் வலுவான அணியாக உள்ளது. இதனால், சென்னை அணிக்கு இந்தப் போட்டி மிகவும் சவாலானதாக தான் இருக்கும். மேலும் சென்னை அணி, கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தேர்வானது. அதன் பின்னர் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவே இல்லை. எனவே இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். கப்பு முக்கியம் பிகிலு..


Click it and Unblock the Notifications











