CCL 2025: கர்நாடகாவை கதறவிட்ட விக்ராந்த்.. கப்சிப் மோடில் வெளியேறிய கிச்சா சுதீப்.. பைனலில் சென்னை!
மைசூரூ: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டி கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்த வாரத்தோடு இந்த சீசன் முடிவடைகிறது. இதில், அரையிறுதி ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் மோதிக் கொண்டது. இந்த போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 தொடரில் இந்த முறை மொத்தம் 7 அணிகள் மட்டுமே கலந்து கொண்டது. இதில் மலையாள சினிமாவைச் சேர்ந்த அணி மட்டும் கலந்து கொள்ளவில்லை. 7 அணிகளில் மிகவும் பலமான அணிகளாக இருந்த அணிகள் என்றால், இரண்டு அணிகள்தான். அதாவது நடப்புச் சாம்பியன் பெங்கால் டைகர்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள்தான்.

இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் கெத்தாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அப்படி இருக்கும்போது, இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என பலரும் நினைத்தார்கள். ஆனால் முதல் அரையிறுதி போட்டியில் பஞ்சாப் தே ஷீர் அணியிடம் பஞ்சராகி வெளியேறியது, பெங்கால் டைகர்ஸ் அணி. அதேபோல், இரண்டாவது அரையிறுதி போட்டியில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை கதற விட்டுள்ளார்கள், நம்ம தமிழ்நாடு திரையுலக நட்சத்திரங்கள்.

CCL 2025: மைசூரில் உள்ள கே.எஸ்.சி.ஏ. பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை ரைனோஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்க தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர், கார்த்தி வந்திருந்தார். இந்த போட்டியில் சென்னை அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என பலரும் கூறினார்கள். ஆனால் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் விக்ராந்தின் அட்டகாசமான ஆட்டத்தினாலும் கேப்டன்சியினாலும், சென்னை ரைனோஸ் அணி அட்டகாசமான வெற்றியைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், லீக் சுற்றில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.

விக்ராந்த்: இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை ரைனோஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும், 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதில் சென்னை அணியின் கேப்டன் விக்ராந்த் 34 பந்தில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் குவித்தது. இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு 130 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

வெற்றி: முதல் இன்னிங்ஸில் 105 ரன்கள் எடுத்த சென்னை அணிக்கு இம்முறை இருந்த நம்பிக்கை, விக்கெட்டுகள் போனாலும் பரவாயில்லை நமக்குத் தேவை வெற்றி என்ற மனநிலையில் விளையாடினார்கள். முதல் இன்னிங்ஸை விட சென்னை அணி இரண்டாவது இன்னிங்ஸில் கூடுதலாக ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. சென்னை அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் சென்னை அணியின் அஜய் 30 பந்தில் 65 ரன்கள் குவித்து வெற்றி வழி வகுத்ததுடன் இறுதி வரை தனது விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.

இறுதிப் போட்டி: பலமான கர்நாடகா புல்டோசர்ஸ் அணிக்கு சென்னை ரைனோஸ் அணியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் சென்னை அணியின் அட்டகாசமான பேட்டிங் மற்றும் கச்சிதமான பவுலிங் என அனைத்துமே தூள் கிளப்புகிறது. இறுதிப்போட்டியில் அது தொடர்ந்தால் பஞ்சாப்பை பஞ்சராக்கி விடலாம் எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சென்னை ரைனோஸ் அணி இன்று அதாவது மார்ச் 2ஆம் தேதி இறுதிப் போட்டியில் பஞ்சாப் தே ஷீர் அணியை எதிர்கொள்ள உள்ளது.




Click it and Unblock the Notifications











