CCL 2026: மழையால் தோல்வியைத் தழுவிய சென்னை கிங்ஸ்.. சேட்டன்கள் செம ஹேப்பி!
கோவை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரானது கடந்த வாரத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் களமிறங்கி உள்ள இந்த சீசனின் லீ போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று, கோப்பையை தவறவிட்ட சென்னை அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வேல்ஸ் சென்னை அணி என்ற பெயரில் களமிறங்கிய சென்னை அணி, தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி உள்ளது. இதில் இரண்டாவதாக கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால் டக்வெர்த் லூயிஸ் விதிப்படி சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
வேல்ஸ் சென்னை கிங்ஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரளா அணி, 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஆதவ் கண்ணதாசன் மூன்று விக்கெட்டுகளும், விக்ராந்த் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

விக்ராந்த்: அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வெற்றியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கேப்டன் விக்ராந்த் நங்கூரம் போல நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அவரது அதிரடியான ஆட்டம் சென்னை அணியின் விக்கெட் வீழ்ச்சியால் தடை படவே இல்லை. அதிரடியாக விளையாடி வந்த இவர், தனது அரைசதத்தை அசால்ட்டாக எட்டினார். அதன் பின்னர் விக்ராந்த் தனது விக்கெட்டை 33 பந்துகளில் 62 ரன்களாக இருந்த போது இழந்தார். இவர் மொத்தம் 6 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களை விளாசினார்.
மழை: ஆட்டம் சென்னை கையில் தான் உள்ளது, மெல்ல மெல்ல தட்டி ஆடினாலும் வெற்றியை எட்டிவிடலாம் என்று சென்னை அணியினர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், குறுக்கே வந்த மழை, சென்னை அணியின் வெற்றிக் கனவை கரைத்தது. மழையால் ஏற்பட்ட கால தாமதத்தால், டக்வெர்த் லூயிஸ் விதிப்படி போட்டியின் முடிவு எட்டப்பட்டது. இதனால் சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.
தோல்வி: ஆனால் சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. இந்த தோல்வியால் சென்னை அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வெற்றியின் மூலம் கேரளா ஸ்ட்ரைகர்ஸ் அணி செமி ஃபைனலுக்கு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications











