Director Siddique - காலமான இயக்குநர் சித்திக்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்
திருவனந்தபுரம்: Director Siddique Passed Away (இயக்குநர் சித்திக் காலமானார்) இயக்குநர் சித்திக் காலமானதற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சித்திக். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் பிரபலமான இயக்குநராக வலம் வந்தார். இதுவரை 20 படங்களை இயக்கியிருக்கும் அவர் 10 படங்களில் நடிகராகவும் ஜொலித்திருக்கிறார். கடைசியாக மலையாளத்தில் மோகன் லாலை வைத்து பிக் பிரதர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

மரணம்: 2020ஆம் ஆண்டு வெளியான பிக் பிரதர் படத்துக்கு பிறகு அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை. அதேசமயம் அவருக்கு உடல்நல குறைவும் ஏற்பட்டது. நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் மாரடைப்பாலும் பாதிக்கப்பட்டார். கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபலங்கள் இரங்கல்: அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் மோகன் லால் வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், "என் அன்புக்குரிய சித்திக்கின் மறைவை நம்ப முடியவில்லை. இயற்கையான நகைச்சுவை, சாமானியர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் என தன் கதைகளை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்குப் பிடித்தமானவராக மாறிய சித்திக், அகாலப் பிரிவின் சோகத்தை எளிதில் சொல்ல முடியாது.
மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்: அவரது இயக்கத்தின் வசீகரம் காரணமாக சித்திக்கின் ஒவ்வொரு படத்திற்கும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் காத்திருந்தனர். சித்திக் எங்களை மிகவும் சிரிக்க வைத்தார், கண்களில் கண்ணீரை வரவழைத்தார், நம்பிக்கையை இழக்காதீர்கள் என்பதை நினைவுபடுத்தினார், மென்மேலும் உயரத்தை அடைய தனது சொந்த வாழ்க்கையின் மூலம் முன்மாதிரியாக இருந்தார்.
பகைமை காட்டமாட்டார்: யாரிடமும் பகைமை காட்டாமல், ஆடம்பரங்களைத் தவிர்த்து, பேச்சிலும், நடத்தையிலும் மென்மையாகவும், சாதாரண மனிதராகவும் வாழ்ந்தவர் சித்திக். அவரது கடைசிப் படமான பிக் பிரதர் முதல் அவர் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் படமான நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு படத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. சினிமாவிலும் வாழ்க்கையிலும் சித்திக் எனக்கு ஒரு பெரிய அண்ணன்" என குறிப்பிட்டுள்ளார். மோகன் லாலை வைத்து வியட்நாம் காலனி, லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன் உள்ளிட்ட படங்களையும் சித்திக் இயக்கியிருக்கிறார்.
அதேபோல் மம்மூட்டி வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், "நேசிப்பவர்களின் தொடர்ச்சியான பிரிவுகளை அனுபவிக்கும்போது வலி ஏற்படுகிறது. சொந்த்த சித்திக்கிற்கு அஞ்சலி" என குறிப்பிட்டுள்ளார். மம்மூட்டியை வைத்து சித்திக் இயக்கிய ஹிட்லர் படம்தான் அவர் முதன்முதலில் சோலோ இயக்குநராக அறிமுகமான படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவரை வைத்து க்ரோனிக் பேச்சிலர், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இவர்கள் இருவரை தவிர்த்து நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சித்திக் ஒரு மென்மையான ஆன்மா. அன்பான மனிதர். திறமையான எழுத்தாளர், இயக்குநர். அவரின் மென்மையான நடத்தைக்கு பிறகு இருக்கும் நகைச்சுவை உணர்வு நம்பவே முடியாதது. ஐகானிக் படங்களை நமக்கு கொடுத்திருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார்.மேலும் கீர்த்தி சுரேஷ் சித்திக்கின் புகைப்படத்தை பகிர்ந்து இதயம் உடையும் எமோஜியை பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











