"சுப்ரமணியபுரம்" நாயகன் சசிகுமாருக்கு இன்று பிறந்தநாள்..சர்ப்ரைஸ் வாழ்த்து கூறிய எஸ். பி. சௌவுத்ரி !
சென்னை : தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் பல தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பவர் எம் சசிகுமார்.
இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிகுமார் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான நிலையில் இப்பொழுது வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி டகால்டி திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் காமன் டிபியை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகுமார் இதுவரை இயக்கியும் நடித்தும் இருந்த சிறந்த 5 படங்களை பற்றி இங்கு நாம் காண்போம்.

சுப்ரமணியபுரம்
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர்களாக திகழ்ந்து வரும் இயக்குனர் பாலா மற்றும் அமீர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எம் சசிகுமார் 2008 ஆம் ஆண்டு வெளியான மாபெரும் வெற்றி திரைப்படமான "சுப்ரமணியபுரம்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகங்களுடன் களமிறங்கினார்.

ஹீரோவுக்கு நண்பனாக
சினிமாவில் அதுவரை கமர்ஷியல் திரைப்படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெற்று கலெக்ஷனை அள்ளி வந்த நிலையில் சசிகுமாரின் "சுப்ரமணியபுரம் " படம் அந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து தரமான திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என முதல் திரைப்படத்திலேயே நிரூபித்துக் காட்டி இருந்தார். மதுரையை மையமாகக் கொண்டு 1980களில் நடப்பது போல உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் ஜெய் மற்றும் சுவாதி லீட் ரோலில் நடித்திருக்க சசிகுமார் "பரமன்" என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நேச்சுரலாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

நாடோடிகள்
இவ்வாறு முதல் திரைப்படத்திலேயே அதிரடியை காட்டிய சசிகுமார் தனது நீண்ட நாள் நண்பன் சமுத்திரகனி இயக்கிய "நாடோடிகள்" என்ற திரைப்படத்தில் நடித்து மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்து திரையுலகை அதிர வைத்தார். நட்பை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த "நாடோடிகள்" திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்தத் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை புரிந்ததோடு தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சிறந்த தயாரிப்பாளராகவும்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஹீரோ ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் மட்டுமே தொடர்ந்து வெளியாகிக் கொண்டு வருவதால் சிறுவர்களை மையமாகக் கொண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு இயக்குனர் பாண்டிராஜ் இயக்குனராக அறிமுகமான "பசங்க" என்ற எதார்த்தமான திரைப்படத்தை சசிகுமார் தயாரித்து தன்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் நிரூபித்தார். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உருவாகியிருந்த "பசங்க" திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கியது மட்டுமல்லாமல் பல்வேறு விழாக்களிலும் விருதுகளை வாங்கிக் குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது.

நட்புக்கு முக்கியத்துவம்
நாடோடிகள் படக்குழு மீண்டும் 2011 ஆம் ஆண்டு "போராளி " என்ற மற்றுமொரு வெற்றி திரைப்படத்தின் மூலம்
புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தனர். சமுத்திரக்கனி, சசிகுமார் என இருவரும் நிஜ வாழ்க்கையில் எவ்வாறு நண்பர்களாக இருக்கின்றார்களோ அதே போல இவர்கள் இணையும் பெரும்பாலான திரைப்படங்களிலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவது தமிழ் சினிமாவில் இன்று வரை பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒன்றாகும். இவ்வாறு நாடோடிகள் திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரகனி இயக்க சசிகுமார் போராளியாக நடித்திருந்த இந்த "போராளி" திரைப்படம் மற்றுமொரு வெற்றித் திரைப்படமாக அமைந்த நிலையில் இந்தத் திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

விஜய் சேதுபதி வில்லனாக
சசிகுமாரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிக்கொண்டிருந்த இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்குனராக அறிமுகமான " சுந்தரபாண்டியன்" தமிழ் சினிமாவில் ஆரவாரமில்லாமல் அதிரடி காட்டி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும். தனது இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த சசிகுமார் இந்த படத்தை தயாரித்திருக்க விஜய் சேதுபதி இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சுப்பிரமணியபுரம், நாடோடிகள் உள்ளிட்ட நட்புக்கு தத்துவம் தரும் திரைப்படங்களின் வரிசையில் சுந்தரபாண்டியனும் அமைய இந்த திரைப்படமும் திரையில் பல நாட்கள் ஓடி வெற்றி பெற்று தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

பிறந்தநாள்
இவ்வாறு நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைப்படங்களை கொடுத்து அனைவரையும் மகிழ்வித்து வரும் சசிகுமார் இப்பொழுது கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பரமகுரு என அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து வர செப்டம்பர் 28 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

புதிய படத்தின் அப்டேட்
இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான "டகால்டி" திரைப்படத்தை தயாரித்த 18 ரீல்ஸ் தயாரிப்பாளர் எஸ் பி சௌவுத்ரி சசிக்குமாரின் பிறந்தநாள் "காமன் டிபி-யை "வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னதோடு "மீச வெச்ச குழந்தை" " தாடி வச்ச தங்கம்" என சசிகுமாரை செல்லமாக புகழ்ந்தவாறு நட்புக்கு இலக்கணமான திருக்குறள் ஒன்றையும் பதிவிட்டு பிறந்தநாள் பரிசாக இவர்கள் இருவரும் இணைய இருக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்
விரைவிலேயே அறிவிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications