CCL 2025: மூன்றாவது கோப்பையை தட்டித் தூக்குமா சென்னை ரைனோஸ்? செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் மொத்த விவரம் இதோ!
சென்னை: கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள திரையுலக நட்சத்திரங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்பது நட்பு ரீதியாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டு முதல் இரண்டு ஆண்டுகள் கோப்பையை சென்னை ரைனோஸ் அணிதான் வென்றது. இதுவரை, மொத்தம் 10 சீசன்கள் நடைபெற்றுள்ளது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு 11வது சீசன் நடைபெறவுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் சென்னை ரைனோஸ் அணி கோப்பையை வென்றது. அதன் பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. 2015,2016,2017 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தெலுகு வாரியர்ஸ் அணியே கோப்பையை வென்றது. இதில் 2015ஆம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. 2019இல் மும்பை ஹீரோஸ் அணியும், மீண்டும் 2023இல் தெலுகு வாரியர்ஸ் அணியே கோப்பையைக் கைப்பற்றியது. கடந்த ஆண்டு பெங்கால் டைகர்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதில் 2018, 2020,2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் போட்டிகள் நடத்தப்படவில்லை.

சிசிஎல்: இந்தமுறை செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி, மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20 ஓவர் போட்டி என்றாலும், இரண்டு இன்னிங்ஸாக இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படுகின்றது. இந்த முறை கடந்த ஆண்டில் இருந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அட்டவணைப்படி சென்னை அணிக்குத்தான் முதல் போட்டி. சென்னை அணி தனது முதல் போட்டியில், பெங்கால் டைகர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. அதே நாளில், மாலையில் கர்நாடகா அணி தெலுகு அணியை எதிர்கொள்கின்றது.
போட்டிகள்: இம்முறை மொத்தம் 7 அணிகள் களமிறங்குகின்றது. கேரளா அணி இம்முறை களமிறங்கவில்லை. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டிகு தகுதி பெறும். இதில் லீக் சுற்றில் சென்னை அணி, பெங்கால் டைகர்ஸ் அணியை பிப்., 8இலும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை பிப்ரவரி 14ஆம் தேதியும், பிப்ரவரி 15இல் தெலுகு வாரியர்ஸ் அணியையும், பிப்ரவரி 22இல் போஜ்பூரி தபாங்ஸ் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.

சென்னை அணி: சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்படுகின்றார். அணியில், விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பிரித்திவ், அசோக் செல்வன், கலையரசன், மெச்சி சிவா, பரத், ரமணா, சத்யா, தசரதன், ஷரன், ஆதவ் மற்றும் பால சரவணன் என மொத்தம் 16 பிரபலங்கள் அணியில் உள்ளனர். இந்தமுறை சென்னை அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளார்கள். மேலும் ஆர்யா தலைமையிலான அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி ஸ்போர்ட்ஸ் 3 ஆகிய தொலைக்காட்சிகளில் இந்தப் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதுமட்டும் இல்லாமல், சென்னை அணி விளையாடும் போட்டிகளை விஜய் சூப்பர் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications











