CCL 2025 - தெலுங்கு வாரியர்ஸை வாரி சுருட்டிய சென்னை ரைனோஸ்.. எந்த நடிகர் அதிரடி ஆட்டம் தெரியுமா?
ஹைதராபாத்: சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 11ஆவது சீசன் நடந்துவருகிறது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றிருக்கின்றன. சென்னை அணியை பொறுத்தவரை ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் சீசன் ஆரம்பித்த சில போட்டிகளில் அவர் பங்கேற்காமல் இருந்துவருகிறார். இந்தச் சூழலில் நேற்று சென்னை ரைனோஸ் அணியும், தெலுங்கு வாரியர்ஸ் அணியும் ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதின.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இடையில் கொரோனோ காரணமாக இரண்டு சீசன்கள் மட்டும் நடக்காமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க தற்போது 11ஆவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இந்த சீசனில், 'சென்னை ரைனோஸ், பெங்கால் டைகர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோஸர்ஸ், கேரளா ஸ்ரைக்கர்ஸ், போஜ்புரி டபாங்ஸ்,பஞ்சாப் டி ஷெர்' ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றிருக்கின்றன.

சென்னை ரைனோஸ் ஆட்டம்: சென்னை ரைனோஸ் பொறுத்தவரை முதல் போட்டியில் பெங்கால் டைக்ரஸ் அணியுடன் மோதியது. ஆனால் அந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியுடன் மோதியது. அதிலும் தோல்வியையே சந்தித்தது. இதனால் சென்னை அணி எப்படியாவது முதல் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் நேற்று தெலுங்கு வாரியர்ஸ் அணியை ஹைதராபாத்தில் சந்தித்தது.
சென்னையில் யார்?: நேற்றைய ஆட்டத்தில் சென்னைக்கு நடிகர் விக்ராந்த் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். மேலும், ரமணா, சரண்,அஜய், தசரதி, ஆதவ் கண்ணதாசன், பரத், கலையரசன், பாரி, பிரித்வி, சாந்தனு ஆகியோர் விளையாடினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷ்ணு விஷாலும், ஆர்யாவும் நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை ஸ்கோர்: அதன்படி முதல் இன்னிங்ஸை ஆடிய சென்னை அணி பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் விக்ராந்த் 28 பந்துகளுக்கு 61 ரன்களை சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக தசரதி 14 பந்துகளில் 35 ரன்களை சேர்த்தார். அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய தெலுங்கு வாரியர்ஸ் அணி பத்து ஓவர்கள் முடிவில் 105 ரன்களை மட்டுமே எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்தது.
முதல் வெற்றி: 20 ரன்கள் லீடுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சென்னை ரைனோஸ் அணி பத்து ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை எடுத்தது. பிறகு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தெலுங்கு வாரியர்ஸ். ஆனால் அந்த அணியில் வீரர்கள் சோபிக்க தவறியதால் பத்து ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை ரைனோஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வருட செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications











