லதா மங்கேஷ்கர் நினைவு தபால்தலை... மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி : பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
கொரோனா தொற்றால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது நினைவு தபால்தலை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாடகி லதா மங்கேஷ்கர்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். தனது 4வது வயதில் பாடல்களை பாடத்துவங்கிய இவர் 13 வயதில் சினிமாவில் பாட ஆரம்பித்தார். தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30,000க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.

வளையோசை பாடல்
தமிழில் எஸ்பிபியுடன் இணைந்து இசைஞானி இளையராஜா இசையில் இவர் சத்யா படத்தில் பாடிய வளையோசை கலகலவென பாடல் தற்போதுவரை அனைவரின் விருப்பத்திற்கும் உரிய பாடலாக உள்ளது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, தாதாசாஹேப் பால்கே, பத்ம பூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை இவர் வென்றுள்ளார்.

லதா மங்கேஷ்கர் மறைவு
இந்தியாவின் நைட்டிங்கேல், இசைக்குயில் என்று அனைவரால் விருப்பத்துடன் அழைக்கப்படும் இவர், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் காலமானார்.

பிரபலங்கள் இரங்கல்
இதையடுத்து அவருக்கு பிரதமர், குடியரசு தலைவர், தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

லதா மங்கேஷ்கர் விருது
இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி அவருக்கு பெருமை சேர்க்கும்வகையில் அவரது பெயரில் ஆண்டுதோறும் இனி லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படும் என்று அவர் பிறந்த மாநிலமான மத்திய பிரதேசத்தின் முதல்வர் எஸ்எஸ் சவுகான் அறிவித்துள்ளார்.

நினைவு தபால் தலை -மத்திய அரசு
மேலும் அவர் பிறந்த இந்தூரில் ஒரு மியூசிக் அகாடமி, மியூசிக் யூனிவர்சிட்டி, மியூசியம் மற்றும் அவரது திருவுருவ சிலை நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அவரது நினைவு தபால் தலை வெளியிடப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











