சூர்யாவுடனான படம் எப்படி இருக்கும்?.. தெலுங்கு இயக்குநர் கொடுத்த செம விளக்கம்
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தை அவரும் அவரது ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் பலத்த அடி விழுந்துவிட்டது. அடுத்ததாக ரெட்ரோ, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு தண்டேல் படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்திலும் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு ஜெய் பீம் படம்தான் கடைசியாக கிடைத்த வெற்றி படம். ஆனால் அது ஓடிடியில்தான் வெளியானது. தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். பிரமாண்ட பட்ஜெட்டில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை படக்குழுவினர் ஏற்றி வைத்தார்கள் என்பதுதான் உண்மை.

படுதோல்வி: ஆனால் அவர்கள் ஏற்றிய ஹைப்புக்கு படத்தில் ஒன்றுமே இல்லை என்று சூர்யாவின் ரசிகர்களே நொந்துகொண்டார்கள். கிரிஞ்ச் தனமான வசனங்கள், சுமாரான திரைக்கதை, மேக்கிங் என சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து செய்துவிட்டார் என்று பலரும் கூறினார்கள். 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் கூறியிருந்தார். ஆனால் இந்தப் படம் 200 கோடி ரூபாயைக்கூட வசூலிக்கவில்லை. இதனால் சூர்யாவும் கொஞ்சம் அப்செட் என்றே விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
சூர்யாவுக்கு தேவை ஹிட்: சூர்யாவுக்கு இந்த நிலைமையில் கட்டாயமாக ஒரு ஹிட் தேவைப்படுகிறது. அந்த ஹிட்டை ரெட்ரோ படம் கொடுக்கும் என்று நம்பியிருக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். சமீபத்தில்தான் படத்திலிருந்து ஒரு சிங்கிள் வெளியானது. இந்தப் படத்தை முடித்த அவர் தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல்: இந்த இரண்டு படங்களை காட்டிலும் அவரது லைன் அப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது வாடிவாசல்தான். ஏனெனில் அந்தப் படத்தை இயக்குவது வெற்றிமாறன். இத்தனை வருடங்கள் பெறாத வெற்றிக்கெல்லாம் சேர்த்து வாடிவாசல் பதில் சொல்லும் என்று காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கியிருக்கின்றன. அதனை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தார்.
தெலுங்கு இயக்குநருடன்: இதற்கிடையே நாக சைதன்யா - சாய் பல்லவியை வைத்து தண்டேல் படத்தை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சந்து இயக்கிய தண்டேல் படம் சமீபத்தில் வெளியாகி நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் சூர்யாவுடன் இணையவிருப்பதாக கூறப்படும் படம் குறித்து சந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அவர் அளித்த அந்தப் பேட்டியில், "இது மிகப்பெரிய கதையாக உருவாகியிருக்கிறது. சூர்யாவுடன் நான் தொடர்பில்தான் இருந்துவருகிறேன்.இந்தப் படத்தின் மீது நீங்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கண்டிப்பாக வைக்கலாம். இந்தக் கதை மீது எனக்கு அபாரமான நம்பிக்கை இருக்கிறது. சூர்யா போன்றொரு நடிகர் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வார்" என்றார்.


Click it and Unblock the Notifications











