திகில் படங்களால் தூக்கம் போகிறது, நோய் பரவுகிறது... சந்திரபாபு நாயுடு தாக்கு
விஜயவாடா: சமூகத்தை கெடுக்கும் வகையில் உருவாகும் சில திகில் படங்களால் மக்களுக்கு நோய் ஏற்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அண்ணன் மகன் நாரா ரோகித் நாயகனாக நடித்துள்ள தெலுங்குப் படம் ராஜா செய் வேஸ்டே. என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி தாரக் ரத்னா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு பாடல் சிடியை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகிழ்ச்சி...
எனது குடும்ப உறுப்பினர்கள் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.

என்.டி.ராமராவ்...
சினிமாவுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளது. சினிமாவில் இருந்த என்.டி.ராமராவ்தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். இந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அரசியலும் தெரியும், சினிமாவும் தெரியும்.

பாலகிருஷ்ணா...
பாலகிருஷ்ணா படம் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது சில படங்கள் வருகிறது. சமூகத்தை கெடுக்கும் வகையில் அது இருக்கிறது.

திகில் படங்கள்...
சில படங்களை பார்த்தால் பயமாக இருக்கும். இரவில் தூக்கம் வராது. தூக்கம் வராததால் இல்லாத நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.

வாழ்த்துக்கள்...
அந்த வகையில் இல்லாமல் இந்த படம் நல்ல வெற்றியை பெறும் என வாழ்த்துகிறேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











