கொஞ்சம் பிளாஷ்பேக்: இந்தியில் மெகா ஹிட்டான முதல் தமிழ் படம்.. சின்ன சேஞ்ச், பெரிய ஆச்சரியம்!
சென்னை: முதன் முதலாக, இந்தியில் டப் செய்யப்பட்டு பிரமாண்ட வெற்றி பெற்ற அந்தத் தமிழ்ப் படம், ஒரு வரலாற்றுக் கதையை கொண்டது.
தமிழ் சினிமாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றுக்குள் ஒளிந்து கிடக்கிறது, ஓராயிரம் கதைகள்!
அதில் ஒன்று சந்திரலேகா. தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத படமாக இருக்கிறது, இது.

பிரமாண்ட படம்
இந்தப் படம் பற்றி பேச ஏராளமாக இருக்கிறது விஷயங்கள். தமிழில் முதன்முதலாக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் இதுதான். எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய இந்தச் சந்திரலேகா, அந்த காலகட்டத்திலேயே, அதிகப் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய படம்! படத்தை ஆரம்பித்து முடிக்கவே ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் இயக்கியது
அதற்குள் ஏகப்பட்ட நடிகர்கள் மாற்றம், சேர்க்கை, நீக்கம் எல்லாமே நடந்திருக்கிறது. எஸ்.எஸ்.வாசன், தனது சொத்துகளை அடமானம் வைத்து, நகைகளை விற்று இந்தப் படத்தை தயாரித்து முடித்ததாகச் சொல்வார்கள். டி.ஆர்.ராஜகுமாரி, எம்.கே.ராதா, ரஞ்சன், சுந்தரிபாய், என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருந்தார்கள் படத்தில். 1943 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தை முதலில் இயக்கியது ராகவாச்சாரி.

குட்டி ராஜ்யம்
கிட்டதட்ட பாதி படம் முடிவடைந்த நிலையில், வாசனுக்கும் ராகவாச்சாரிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பிறகு அவர் விலக, இயக்குனர் சீட்டில் அமர்ந்தார் எஸ்.எஸ்.வாசன். பாதிப்படம் நடந்து கொண்டிருந்தபோது, திரைக்கதை மாற்றப்பட்டன. இதனால் காட்சிகள் மாறின. இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்த காலகட்டத்தில் ஜெமினி ஸ்டூடியோவுக்குள் வந்தால், யானைகள், குதிரைகள், நடனம், மறுபக்கம் இசை அமைப்பு என ஒரு குட்டி ராஜ்யம் போல இருந்ததாகச் சொல்வார்கள்.

டிரம் டான்ஸ்
இந்தப் படத்தில் இடம்பெற்ற டிரம் டான்ஸ், இப்போது வரை வியக்கும் ஒன்று. அந்த காலத்திலேயே 400 நடன கலைஞர்களுக்கு ஆறுமாதமாக, தினமும் பயிற்சி அளித்து அந்தக் காட்சியை சிறப்பாக எடுத்தார்கள். நான்கு கேமரா கொண்டு படமாக்கினார்கள். இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்தவர் ராஜேஸ்வர ராவ். ஒரு வருடமாக இந்தப் படத்துக்கு கம்போஸிங்கில் இருந்ததாகக் கூறியிருக்கிறார் ஒரு பேட்டியில்.

மும்பை வினியோகஸ்தர்
இந்தப் படத்துக்கு இசை அமைக்க அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.1,500. இது, அப்போது பெரிய தொகை. இவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருந்தாலும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மும்பை வினியோகஸ்தர் தாராசந்த் என்பவர், இந்தப் படத்தைப் பார்த்தார். அவருக்கு ஆச்சரியம். 'படம் மிரட்டலாக இருந்திருக்கிறது. இந்தி ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள். சில குளோசப் ஷாட்களை மட்டும் எடுத்து சேர்த்து, டப் பண்ணி வெளியிட்டால் நன்றாக ஓடும்' என்று சொல்ல, களத்தில் இறங்கினார்கள்.

பக்கம் பக்கமாக
சொன்னபடியே சில ஷாட்களை மட்டும் புதிதாக எடுத்து, பக்கம் பக்கமாக விளம்பரம் செய்தார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் எங்கு பார்த்தாலும் இந்தப் படத்தின் போஸ்டர்கள்தான். பிரமாண்ட படத்தை இப்போதைய காலம் போல அப்போதே செலவு செய்து வெளியிட்டார்கள். படம் செம ஹிட். தமிழில் மிகப்பெரிய வெற்றி பெறாத சந்திரலேகா, இந்தியில் வெற்றிக்கொடி நாட்டியது. தென்னிந்தியாவில் இருந்து இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட படமும் வெற்றி பெற்ற முதல் படமும் இதுதான்!


Click it and Unblock the Notifications











