Chandrayaan 3: நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3... கமல், சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து மழை!
சென்னை: இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் பெரும் சாதனை நிகழ்வான இதனை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியை பாராட்டி கமல், சிம்பு, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3 - பிரபலங்கள் வாழ்த்து: இந்தியாவின் இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தற்போது தரையிறங்கியது. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு மிகப் பெருமையான தருணமாக இது அமைந்துள்ளது. அதாவது, நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த நான்காவது நாடாக இந்தியா சாதனைப் படைத்துள்ளது.
இந்த வரலாற்று வெற்றியை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல், இதற்கு காரணமான விஞ்ஞானிகளையும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் சந்திராயன் 3 சாதனைக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட் செய்துள்ள கமல்ஹாசன், "செயற்கைகோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து செல்வது முதல் நிலவில் இறங்குவது வரை என்ன ஒரு பயணம்.! இஸ்ரோ அணி தேசத்தின் பெருமை. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள் இது. இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" என பாராட்டியுள்ளார்.
அதேபோல், நடிகர் சிம்புவும் சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை பாராட்டி ட்விட் செய்துள்ளார். "நிலவில் சந்திரயான்3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நாள் ஒவ்வொரு இந்தியனுக்கும் சரித்திரமாக அமைந்துள்ளது. நட்சத்திரங்கள், சந்திரன் அதற்கும் அப்பால் நாம் அடைய முடியும் என்ற பெருமையும் நம்பிக்கையும் ஒரு சேர கிடைத்த தருணம்" என இஸ்ரோவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மலையாள டாப் ஹீரோக்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரும் சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியதை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். "இந்த வரலாற்று சாதனையில் பங்கேற்ற இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த மைல்கல்லைக் கொண்டாடுவதில் நான் நாட்டுடன் இணைந்து கொள்கிறேன். எவ்வளவு பெருமையான தருணம்" என மம்முட்டி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் தனது டிவிட்டரில், "இறுதியாக தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திராயன் 3 வரலாறு படைத்துள்ளது. இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் உட்பட ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தியாவை பெருமைப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக் கூறி ட்விட் செய்துள்ளார். டோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் தனது டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "விண்வெளி ஆய்வில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம். சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தைத் தொட்டது, இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டிய முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது! ஜெய்ஹிந்த்!" என பதிவிட்டுள்ளார். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல பிரபலங்களும் சந்திராயன் 3 சாதனையை பாராட்டி டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











