குரைக்கும் நாய் குரைக்கட்டும்.. வாயை விட்ட பயில்வான் ரங்கநாதன்.. பஞ்சராக்கிய வெங்கடேஷ் பட்
சென்னை: சினிமா பத்திரிகையாளராகவும், நடிகராகவும் திகழ்பவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வேலைகளை மட்டும் பார்க்காமல் யூட்யூபில் பேட்டி கொடுக்கிறேன் என்கிற பெயரில் திரை பிரபலங்கள் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அவரது பேச்சு அவதூறுதான் என பலரும் சொல்கிறார்கள்; கண்டிக்கிறார்கள். ஆனால் பயில்வானோ அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேசுகையில் வெங்கடேஷ் பட் பற்றி பேசியிருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் வெகு பிரபலமடைந்தார் வெங்கடேஷ் பட். சமையலுக்கு அவர் கொடுக்கும் டிப்ஸும், அடிக்கும் கமெண்ட்டுகளும் ரசிக்கும்படியாக இருந்தன. இதன் காரணமாக தொடர்ந்து சில சீசன்கள் பணியாற்றினார். ஆனால் நடந்து முடிந்த ஐந்தாவது சீசனிலிருந்து வெளியேறினார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் இப்போது இருக்கிறார். அவர் குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறியது சின்னத்திரை வட்டாரத்தில் கவனம் பெற்றது.

பயில்வான் ரங்கநாதன் என்ட்ரி: வெங்கடேஷ் பட் இப்படி வெளியேறியதற்கு காரணங்களாக பலர் பல யூகங்களை சொல்லினர். இந்தச் சூழலில்தான் பெரும்பாலும் திரைத்துறையினரை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவரும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்தை பற்றி பேசினார். அப்போது வெங்கடேஷ் பட் விஜய் டிவியிடம் எக்கச்சக்கமாக சம்பளம் கேட்டிருக்கிறார். அதற்கு சேனல் நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் வெளியேறினார் என்று கூறினார்.
வெங்கடேஷ் பதிலடி: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு விளக்கமளித்திருக்கும் வெங்கடேஷ், "அனைவருக்கும் வணக்கம். முகநூலில் ஒரு சங்கடமான விஷயம் நடந்திருக்கிறது. பயில்வான் ரங்கநாதன் என்கிற யாரோ ஒருவர் என்னைப் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவுக்கு கீழே அவரை திட்டி பலர் கமெண்ட்ஸ்களை போட்டுவருகிறார்கள். என்னுடைய ரசிகர்கள், என் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
தயவு செய்து வேண்டாம்: தயவுசெய்து அதுபோல் திட்டி கமெண்ட்ஸ்களை போட வேண்டாம். அவருடைய நிலைமை என்னவென தெரியவில்லை. பணத்துக்காகவா இல்லை மனநிலை சரியில்லாமல் இதுபோன்று செய்கிறாரா என தெரியவில்லை. ஏதோ பிழைப்புக்காக சொல்கிறார். அவர் அவரது வேலையை செய்யட்டும். அந்த சாணியில் கல் எறிய வேண்டாம். உண்மை இல்லாமல் செய்யக்கூடிய பல விஷயங்கள் இன்று சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
சகஜமான ஒன்றுதான்: இதெல்லாம் பொது வாழ்க்கையில் சகஜமான விஷயம்தான். ரஜினிகாந்த் சொன்னதுபோல், யார் என்ன சொன்னாலும் நாம் நமது வழியை பார்த்துக்கொண்டு போக வேண்டும். நாம் நம்முடைய வேலையை செய்வோம். எல்லோரையும் சிரிக்க வைப்போம். எதைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. எனவே நீங்கள் தலையிட்டு உங்கள் மன நிம்மதியை கெடுத்துக்கொள்ளாதீர்கள். இதுபோன்று வரும் செய்திகளுக்கு ரியாக்ட் செய்யக்கூடாது. நாம் சூரியனாக இருப்போம் நம்மை பார்த்து எந்த நாய் வேண்டுமென்றாலும் குரைக்கட்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











