Simbu: கொரோனா குமார் கால்ஷீட் பிரச்சனை.. தீர்வு காண நீதிபதியை நியமித்த கோர்ட்!
சென்னை: கடந்த 2021ம் ஆண்டில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.
இந்தப் படத்திற்காக சிம்புவிற்கு 9 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும் 4 கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் வேல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்பணம் வாங்கிய நிலையில் குறிப்பிட்டபடி படப்பிடிப்பிற்கு வராததால் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேல்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பா டி ராஜேந்தர் உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ந்து ஹீரோவாகவும் ஏராளமான படங்களில் நடித்து, இயக்கம், பாடகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருபவர். தற்போது முன்னணி நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார் சிம்பு. சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. கிருஷ்ணா என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
கமல் தயாரிப்பில் நடிக்கும் சிம்பு: இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு48 படத்தில் கமிட்டாகியுள்ளார். முன்னதாக கடந்த 2021ம் ஆண்டில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் சிம்பு கமிட்டாகியிருந்தார். இதற்காக அவருக்கு 9 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும் முன்பணமாக 4 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் வேல்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
வேல்ஸ் நிறுவனம் குற்றச்சாட்டு: ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் சிம்பு பங்கேற்கவில்லை என்றும் இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வேல்ஸ் நிறுவனம் இதற்காக நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடந்துவந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நீதிபதி நியமனம்: சிம்பு -வேல்ஸ் நிறுவனம் இடையிலான இந்த பிரச்சினையில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் என்பவரை நியமித்துள்ளது. நீண்ட மாதங்களாக நீடித்துவரும் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தொடர்ந்து சிம்பு எதிர்கொண்டு வருகிறார். முன்னதாக சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் விதிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
தொடர் புகார்: முன்னணி நடிகராக உள்ள சிம்பு தொடர்ந்து சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை. கால தாமதம் செய்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறார் என நீண்ட காலங்களாகவே அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சிம்புவின் நடிப்பில் வெளியான படங்களும் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சிம்பு. இந்நிலையில் வேல்ஸ் நிறுவனத்தின் இந்தப் புகார் கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











