Vijay Antony :பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு.. பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் கொடுத்த அதிரடி வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்தார்.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்தையும் சசியே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நடிகர் விஜய் ஆண்டனி படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி : நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவக்கினார். பல துள்ளளிசை பாடல்களையும் மெலடி பாடல்களையும் கொடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் நடிகராகவும் தன்னுடைய பாதையை உருவாக்கிக் கொண்டார். தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் என பல தளங்களில் பயணித்த விஜய் ஆண்டனி, தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார்.
சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார் விஜய் ஆண்டனி. இந்தப் படம் அவருக்கு சிறப்பாகக் கைக்கொடுத்தது. வசூலிலும் மிரட்டியது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் இரண்டாவது பாகத்தையும் சசியே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங், சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
மலேசியாவில் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், அங்கு ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனி சிக்கினார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மூக்கு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அதிலிருந்து மீண்ட விஜய் ஆண்டனி, படத்தின் சூட்டிங்கில் மீண்டும் கவனம் செலுத்தினார். படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது.
படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாங்காடு மூவிஸ் உரிமையாளர் ராஜ கணபதி என்பவர் தன்னுடைய தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கருவையும் வசனங்களையும் பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி பயன்படுத்தியதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது அனுமதியின்றி, ஆய்வுக்கூடம் படத்தின் கதையை விஜய் ஆண்டனி பயன்படுத்தியுள்ளதால் தனக்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் விஜய் ஆண்டனி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர். விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் முதல் முறையாக உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படம் அடுத்தடுத்து அவருக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணி வருகிறது. சூட்டிங்கின்போது பலத்த காயமடைந்து விஜய் ஆண்டனி மீண்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீசை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











