சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை வெளியிட கோர்ட் தடை
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் இந்த படம் ரிலீசாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள படம் அயலான். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் அயலான் படத்தை 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. சையின்ஸ் ஃபிக்ஷன் காமெடி படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிவகார்த்திகேயன்
அயலான் படம் டிசம்பர் மாதம் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்தது. சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த டாக்டர் படம் அதிக வரவேற்பை பெற்று, வசூலையும் பெற்றதால் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

வழக்கு போட்ட டைரக்டர்
இந்நிலையில் டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர் அயலான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்த நிலையில் தற்போது வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை
தற்போது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து அயலான் படத்தை தயாரிக்கும் நிலையில், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடவோ,விநியோகம் செய்யவோ தடை விதிக்க கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இடைக்கால தடை
அயலான் படத்தை வெளியிட 2022, ஜனவரி 3 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார். இதனால் ரசிகர்களும், படக்குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என தொடர்ந்து சட்ட ரீதியான முயற்சிகளை படக்குழு துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

படக்குழு ஆலோசனை
மனுதாரர் தரப்போடு உள்ள பிரச்சனையை முடித்து கொள்வதும் மேற்கொண்டு இந்த வழக்கில் பதிலளித்து வழக்கை தொடர்வதும் படக்குழுவின் விருப்பம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











