தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது.. மறுதேர்தல் நடத்த உத்தரவு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத காலத்திற்குள் மறு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது..
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் வாக்குகள் எண்ணப்படவில்லை. இதற்கிடையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தலில் தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை உள்ளிட்டோரும், தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யகோரி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கல்யாணசுந்தரம், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸை தேர்தல் அதிகாரியாக நியமித்த நீதிபதி புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்..
மேலும், மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கீதா தொடர்ந்து கவனிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











