விஷாலுக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு.. ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் 2016 ம் ஆண்டு மருது திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
அதனை திருப்பி செலுத்த முடியாததால் தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்பு செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரியுள்ளார்.

கடனை அடைத்த லைகா நிறுவனம்
அதன்படி லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, 2019 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் தேதி லைகா உடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி, லைகா நிறுவனம் தன்னுடைய கடனை செலுத்தியதற்காக 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

துப்பறிவாளன் 2 வெளியான பின்
அதன்படி, துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியான பின் 2020 மார்ச் சமயத்தில் 7 கோடியும், மீதத் தொகையை 2020 டிசம்பருக்குள்ளும் செலுத்தி விடுவதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது

விஷாலுக்கு எதிராக லைகா வழக்கு
இந்நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கவில்லை எனவும், மொத்தமாக 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிட கோரியும் லைகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

லைகாவுக்கு அபராதம் - மனு தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்,
துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது என தெரிவித்து, லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்


Click it and Unblock the Notifications











