ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. அரவிந்த்சாமியை அலைக்கழித்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!
சென்னை: பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்ததற்காக நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி வழங்காதது தொடர்பான வழக்கில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை எட்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
நடிகர் அரவிந்த் சாமிக்கு தனி ஒருவன் திரைப்படம் கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடித்த அரவிந்த் சாமி,சித்திக் இயக்கத்தில் உருவான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற படத்தில் நடித்தார். 2018ம் ஆண்டு வெளியான இப்படத்தில், அமலாபால், ரோபோ ஷங்கர், சூரி ஆகியோர் நடித்திருந்தனர்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்: இப்படத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமி, இதில் நடிக்க செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ.30 லட்சத்தை வழங்கவில்லை என்றும், டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்யப்பட்ட ரூ.27 லட்சத்தை முறையாக செலுத்தவில்லை என்றும், பட வெளியீட்டுக்காக பெற்ற ரூ.35 லட்சம் கடனை திருப்பித்தரவில்லை எனக்கூறி படத்தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
சம்பள பாக்கி: இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் அரவிந்த் சாமிக்கு மொத்தமாக செலுத்த வேண்டிய ரூ.65 லட்சத்தை 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், ரூ. 27 லட்சம் டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் படத்தயாரிப்பாளருக்கு 2019ம் ஆண்டே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தயாரிப்பாளர் உயர்நீதிமன்ற உத்தரவிட்டும் பணத்தை வழங்காததால், உயர்நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்தக் கோரியும், தயாரிப்பாளருக்கு சொந்தமான சொத்துகளை அறிவிக்கக்கோரியும் அரவிந்த்சாமி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
பிடிவாரண்ட்: இது குறித்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, தனக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, சொத்து எதுவும் இல்லையென்றால் திவாலானவர் என அறிவித்து கைது நடவடிக்கையை தவிர்க்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாகக் கூறி, படத் தயாரிப்பாளரான முருகன் குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 8க்கு தள்ளிவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











