கொலவெறி பாடல் விவகாரம்..சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு!
சென்னை: நடிகர் தனுஷ் நடித்த 'மூன்று' படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடலின் காப்புரிமையை மீறியது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிராக ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் தனுஷ் நடித்து, கடந்த 2012ம் ஆண்டு வெளியான மூன்று திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல், படம் வெளியாகும் முன் உலக அளவில் பிரபலமடைந்தது.

இந்த பாடலின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையைப் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், காப்புரிமையை மீறி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டதாக கூறி, சோனி மியூசிக் நிறுவனம், அதன் இயக்குனர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோருக்கு எதிராக, '3' பட தயாரிப்பு நிறுவனம் ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்ட எழும்பூர் நீதிமன்றம், சோனி மியூசிக் நிறுவன அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், சோனி நிறுவனம், அதன் இயக்குனர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சோனி மியூசிக், அதன் இயக்குனர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோர் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து, சோனி நிறுவன அதிகாரிகளுக்கு விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், 2013ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கை, மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைக்காவிட்டால், நேரில் ஆஜராக விலக்களித்த உத்தரவு, தானாக ரத்தாகி விடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











