வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடாது... சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: யூ டியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் வடிவேலு தன்னுடைய முகபாவனை, உடல் மொழி, பேச்சு என அனைத்தையும் மாற்றி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடுவார். அவருடன் பல படத்தில் சேர்ந்து நடித்த நடிகர் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிங்கமுத்து, வடிவேலு குறித்து படு மோசமாக பேசி வந்தார்.

5 கோடி மான நஷ்டம்: சிங்கமுத்து பேசியது சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, நடிகர் வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனு தாக்கல் செய்யவும் இரு வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கை தள்ளிவைத்தது.
இன்று விசாரணைக்கு வந்தது: இதையடுத்து சிங்கமுத்து தாக்கல் செய்த பதில் மனுவில், அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை எனவும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களையும் மட்டுமே பேட்டியில் தெரிவித்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வடிவேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து யூடியூப் சேனல்களில் அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக, குற்றம் சாட்டினார்.
வீடியோக்களை நீக்க வேண்டும்: இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வழக்கு தாக்கல் செய்த பின் சிங்கமுத்து எந்த பேட்டியும் கொடுக்கவில்லை எனவும், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் எனவும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று நீதிபதி, வழக்கை டிசம்பர் 11ம் தேதி தள்ளி வைத்தார். மேலும், வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், யூடியூபில் உள்ள வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட நீதிபதி, யூ டியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











