விஜய்க்கு மன்னிப்பே கிடையாது.. ரூ 1.5 கோடியை அபராதமா கட்டுங்க.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகர் விஜய் நடித்து வெளியான படமான புலி படத்திற்கு அவர் வாங்கிய சம்பளமான ரூபாய் 15 கோடியை கணக்கில் காட்டாததால் அவருக்கு வருமான வரித்துறை தரப்பில் இருந்து, ரூபாய் 15 கோடியின் 10 சதவீதத்தை அதாவது ரூபாய் 1.5 கோடியை அபராதமாக கட்டச் சொல்லி உத்தரவிட்டது. இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஜய் ரூபாய் 1.5 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான படம் புலி. பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்கு பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆனதால், பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் தனது மகனின் வாலு படத்திற்கு இருந்த பிரச்னையை தீர்க்க விஜய் உதவியதால் நன்றி சொல்ல வந்த இயக்குநர் டி ராஜேந்தர் இது அந்த புலி, இந்த புலி என்று அடுக்கு மொழியில் பேசி பில்டப் ஏற்றிய வீடியோக்கள் இப்போதும் இணையத்தில் உள்ளது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை.

ரூ. 1.5 கோடி அபராதம்: இப்படி இருக்க, இந்த படத்திற்காக நடிகர் விஜய் சம்பளமாக ரூபாய் 15 கோடி பெற்றுள்ளார். இதை அவரது வருமான வரி கணக்கில் குறிப்பிடாததால் இவருக்கு ரூபாய் 1.5 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. இதில் விஜய் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், வருமானவரித்துறை எங்கள் வீட்டில் ரெய்டு நடத்தியது 2019ஆம் ஆண்டு. வருமான வரித்துறை சார்பில் அபராதம் விதிப்பது என்றால் அதை 2019ஆம் ஆண்டே விதித்திருக்க வேண்டும். ஆனால் அதைவிட்டுவிட்டு, மூன்று ஆண்டுகள் கழித்து அதாவது 2022ஆம் ஆண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அபராதம் விதித்தது சரி: விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விஜய் வருமானத்தை மறைத்ததால் அவருக்கு ரூபாய் 1.5 கோடிகளை அபராதமாக விதித்துள்ளது வருமான வரித்துறை. அபராதம் விதித்ததில் எந்த விதி மீறலும் இல்லை. காலம் கடந்து அபராதம் விதித்திருந்தாலும் அபராதம் விதித்தது சரிதான் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











