தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு.. படப்பிடிப்பு நடைபெறாததால் விசாரணையை ஒத்திவைத்தது ஹைகோர்ட்!
சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தலைவி படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக மூன்று மாதம் நிறுத்தி வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் தடை கோரிய வழக்கு விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் எடுக்கப்பட்ட தலைவி, ஜெயா, குயின் ஆகிய படங்கள், இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் கொரோனா ஊரடங்கு, காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் மூன்று மாதமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை, ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்குமரன் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











