Vijay Antony :விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் திரையிடலாம்.. ஐகோர்ட் அனுமதி!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்கக்கோரி மாங்காடு மூவிஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை ரிலீஸ் செய்ய தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து படம் அறிவித்தபடி வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி : இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ள நிலையில், நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது கேரியரில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்தது.
கடந்த 2016ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்தே விஜய் ஆண்டனியின் நடிப்பில் ஒரு முதிர்ச்சி காணப்பட்டது. தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார் விஜய் ஆண்டனி. தனக்கு இயக்குநராகும் எண்ணம் இருந்ததில்லை என்றும் ஆனால் பிச்சைக்காரன் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயாரித்துக் கொண்டு இயக்குநர் சசியிடம் தான் சென்றதாகவும் ஆனால் அவர் மற்றொரு ப்ராஜெக்ட்டில் பிசியாக இருந்ததால் அவரால் அந்தப் படத்தை இயக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்தப் படத்தை மற்றொரு இயக்குநரை வைத்து எடுக்க நடந்த முயற்சியும் நடக்காமல் போனதால் தானே இந்தப் படத்தை இயக்கியதாகவும் அவர் நேற்றைய தினம் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டில் பேசியுள்ளார். இநத்ப் படம் வரும் மே மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் படம் வெளியாவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர் பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படத்தின் கதையை அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளதாகவும் தங்களுக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விஜய் ஆண்டனி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எஸ சௌந்தர், பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளார். அதே நேரத்தில் படத்தை வெளியிடுவதன்மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அறிவித்தபடி படம் மே 19ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











