நடிகர் சங்க தேர்தல் வழக்கு...உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு...விஷால் அணி தேர்தலில் வெல்லுமா?
நடிகர் சங்கத்தேர்தலை ரத்துச் செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நடிகர் சங்கத்தேர்தல் குறித்த முக்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது விஷால் அணியினருக்கு வெற்றியாக இருந்தால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அவர்களுக்கு வெற்றியைத்தருமா? என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியவரும்.

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து விஷால் அணி வழக்கு
கடந்த 2019 ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து விஷால் அணியினர் தொடர்ந்த மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு நடந்து வந்தது.

நடிகர் சங்கம், விஷால் அணி முடிவை அறிவிக்க கோரிக்கை
நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாகவும், வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என நடிகர் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ள நிலையில் மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதம் வைத்திருந்தனர்.

தேர்தலை ரத்துச் செய்ய கோரிக்கை
எதிர்தரப்பான ஏழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும், சங்க உறுப்பினர்களின் இறுதி பட்டியலை உறுதிபடுத்தவில்லை எனவும் ,எனவே நடிகர் சங்க உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இந்த மேல்முறையீடு வழக்குகள், மூன்று அமர்வுகளை கடந்து இறுதியாக, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் அமர்வு விசாரித்து, 2021 அக்டோபர் 26 ம் தேதி, வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

தேர்தல் செல்லும்...வாக்குகளை எண்ண உத்தரவு
இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லும் எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். சிறப்பு அதிகாரி பதவிகாலம் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அவரது நியமனத்தை எதிர்த்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், கடந்த 2019ல் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டியை, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட்டனர்.

3 வாரங்களுக்குள் முடிவு விஷால் அணி வெல்லுமா?
அதன்பின், வாக்கு எண்ணிக்கையை நடத்த தேதியை முடிவு செய்து, வாக்குகளை எண்ணி, நான்கு வாரங்களில் முடிவுகளை அறிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேல்முறையீடு செல்ல இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென நடிகர்கள் பெஞ்சமின், ஏழுமலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டனர். தீர்ப்பில் வென்றாலும் வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணி வெல்லுமா என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











