பின்னணி பாடகரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை : இந்திய அளவில் புகழ்பெற்ற ஐதராபாத் சேர்ந்த பின்னணி பாடகரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பாடகர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடகர் அளித்த புகாரின் படி, 15 வயது சிறுமி, தனது உறவுக்கார பெண்ணுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். அங்கு உறவினர்கள் 2 பேர், பாதிரியார் ஆகியோர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கீழ்பாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை
கடந்த 6 ஆண்டுகளாக தனது மகள், பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக பாடகர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 18 மாதங்களுக்கு முன்பு தான் அந்த சிறுமி ஐதராபாத்திற்கு திரும்பி உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே தனது தாயிடம், தனக்கு பாதிரியாரும், உறவினரும் பாலியல் தொல்லை கொடுப்பதாக அச்சிறுமி கூறி உள்ளார்.

சமாதானம் செய்த தாய்
அதற்கு அந்த சிறுமியின் தாய், அவர்கள் நமது நெருங்கிய உறவினர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என சமாதானம் கூறி உள்ளார். அதற்கு பிறகு சென்னைக்கு திரும்பி செல்ல மாட்டேன் என அச்சிறுமி அடம்பிடித்து, கடந்த 18 மாதங்களாக பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார்.

சென்னை போலீசில் புகார்
அதற்கு பிறகு தான் தாயும், மகள் சொன்னதன் தீவிரத்தை புரிந்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தான் அந்த பாடகர் இந்த விஷயத்தை சீரியசாக கையாள துவங்கி உள்ளார். மகள் சொன்ன தகவலின் அடிப்படையில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாய்ந்தது போக்சோ சட்டம்
இந்த குற்றத்திற்கு துணை போனதாக உறவுக்கார பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் மீதும் போக்சோ சட்டம் மற்றும் அது தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











