Chennai Super Kings - லோகேஷின் ஃபயர்.. வெங்கட் பிரபுவின் எமோஷனல் - சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்து
சென்னை: Chennai Super Kings (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதை அடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் நான்கு முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஒருமுறை கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி குஜராத் அணிக்கு ஷுப்மன் கில்லும், சஹாவும் தொடக்கம் தந்தனர். கில் இந்த சீசனில் வெறித்தனமான ஃபார்மில் இருப்பதால் அவரை விரைவாக வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர்.

கில் கொடுத்த வாய்ப்பு:
அதன்படி சென்னை அணியின் முதல் இரண்டு ஓவர்கள் அபாரமாக இருந்தன.குறிப்பாக தேஷ்பாண்டே ஓவரில் கில் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் அதனை தீபக் சஹர் தவறவிட்டார். பிறகு கியரை மாற்றிய கில் சிறிது நேரம் அதிரடி காட்டினார். ஆனால் ஜடேஜா ஓவரில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்ப்பிங்கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கில் புயல் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் பெவிலியன் கடந்தது.
சஹா - சுதர்சன் ஜோடி:
கில் வெளியேறிய பிறகு சஹாவும், தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நிதானமாகவும், தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் எதிர்கொண்டது. இதன் காரணமாக சஹா 54 ரன்கள் அடித்தார். அந்த சமயத்தில் அவர் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய சுதர்சன் 96 ரன்கள் குவித்து அசத்தினார். மொத்தம் குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை எடுத்தது.

களமிறங்கிய சென்னை குறுக்கே வந்த மழை;
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ருதுராஜ் கெய்க்வாட்டும், கான்வேயும் சென்னை அணிக்கு தொடக்கம் தந்தனர். மூன்றாவது பந்தில் ருதுராஜ் ஒரு பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் அந்த சமயத்தில் மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து மழை ஓய்ந்த பிறகு மைதானத்தை தயார் செய்யும் பணி தீவிரமடைந்தது. ஒருவழியாக ஆட்டம் 12.10 மணிக்கு தொடங்கியது.
சென்னையின் இலக்கு:
மழை காரணமாக டிஎல்எஸ் முறைபடி சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களிலும், கான்வே 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஐபிஎல் விளையாடிய அம்பத்தி ராயுடு 19 ரன்களும், ரஹானே 27 ரன்களும், தோனி ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விளையாடிய ஜடேஜா சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அவர் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக சென்னை ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது.

பிரபலங்கள் பாராட்டு:
இந்நிலையில் சென்னை வெற்றி பெற்றதை அடுத்து திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தோனியின் புகைபப்டத்தை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெருப்பு எமோஜியை கேப்ஷனாக இட்டிருக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறந்த இறுதிப்போட்டி. சிறந்த வெற்றி. லவ் யூ சென்னை, ரவீந்திர ஜடேஜா. நாம் சாம்பியன்ஸ். இதைவிட சிறந்தது இருக்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் வாழ்த்து:
போட்டியை நேரில் பார்த்த விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்தப் போட்டிக்கு தனி இடம் உண்டு. இந்த தருணத்தை எப்போதும் போற்றுவேன். இதுவரை விளையாடியதில் நீண்ட இறுதி போட்டி இது. ஓரிரு நாட்கள் காத்திருந்து மிகச்சிறந்த விளையாட்டை கண்டேன்" என குறிப்பிட்டுள்ளார். இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், "Cricket உயரத்திற்கு ஏணியாக பலர்... ஆனால் தோணியாக சென்னையை வெற்றியின் கரையில் சேர்ப்பதில் அவரே ஆகச் சிறந்தவர்.வெற்றிக்கு ஆயிரம் சூத்திரம் இருக்கலாம்.ஆனால் வெற்றியே அடுத்ததை ஆரோக்கியமாக நகர்த்தும் சூத்திரம்.மகிழ்ச்சி மழையில் csk ரசிகர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











