வாட்ஸ்-ஆப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை... நடிகை ஜெயலட்சுமி பரபரப்பு புகார்.. 2 பேர் கைது
நடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: வாட்ஸ் அப் மூலம் அதிக பணம் தருவதாக ஆசை காட்டி நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த இருவரை சென்னைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நடிகை ஜெயலட்சுமி. பரத்தின் நேபாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம் உள்பட 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரைத் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போனிற்கு குறிப்பிட்ட சில எண்களில் இருந்து விரும்பத்தகாத சில வாட்ஸ் அப் பதிவுகள் வந்துள்ளது. அதில், 'நீங்கள் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்களா? உங்களோடு வருவதற்கு வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள். ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும் தருவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்' என்பது போன்ற தகவல்கள் இருந்துள்ளன.

விசாரணை :
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, உடனடியாக இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இது குறித்து உடனடியாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

வலை:
அதில், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகப்பெருமான், கவியரசன் ஆகிய இருவரும் தான், ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப்பில் மேற்கூறிய தவறான மெசேஜ்கள் அனுப்பியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் போல் பேசி, அவர்கள் இருவரையும் அண்ணாநகர் பகுதிக்கு போலீசார் வரவழைத்தனர். அங்கு வைத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அழைப்பு :
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, "கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் எனது செல்போனுக்கு அடுத்தடுத்து 2 எண்களில் இருந்து வாட்ஸ்- அப்பில் சில தகவல்கள் வந்தது. அதில் வெளியில் டேட்டிங் செல்லலாம் என்றும், அதற்காக எங்களிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடவடிக்கை:
இதனை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களது ஆலோசனை பேரில்தான் போலீசில் துணிச்சலுடன் புகார் அளித்தேன். போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

பயப்படக் கூடாது ;
இதுபோன்ற நேரங்களில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி பயப்படாமல் தைரியத்துடன் அதனை எதிர் கொள்ள வேண்டும். நடிகை என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவு செய்வது சரியல்ல. எங்களுக்கும் குடும்பம் உள்ளது. மற்ற பெண்களை போலத்தான் நாங்களும். எனவே என்னை போன்ற நடிகைகளும் இதுபோன்ற பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











