சி2எச்: இயக்குநர் சேரன், மகள் நிவேதா மீது செக் மோசடி வழக்கு!
இயக்குநர் சேரன் ஆரம்பித்த சி2எச் நிறுவனத்தின் மீது முதல் புகார் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
‘சி2எச்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சேரன் மகள் நிவேதா பிரியதர்சினி உள்ளார்.

இந்த நிறுவனத்தின் முகவர்களில் ஒருவரான பழ முத்துநாதன் (40), பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளில் டிவிடி விற்கும் முகமையைப் பெற்றுள்ளார்.
இதற்காக அவர் ரூ.80 ஆயிரம் டெபாசிட் செலுத்தினாராம். அந்த நிறுவனம் சரியாக செயல்படாததால் கணக்குகளைச் சரிபார்த்து டெபாசிட் தொகையை திரும்பத் தருவதாக சேரனும், அவரது மகளும் ஒப்புக்கொண்டார்களாம்.
இதையடுத்து 27.6.2015 அன்று அந்த தொகைக்காக பழமுத்துநாதனுக்கு காசோலை வழங்கி உள்ளனர். அந்த காசோலையை 4.7.2015ல் அவர் பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் செலுத்தினாராம். ஆனால் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பி விட்டது.
இதுபற்றி சேரனிடம் கேட்டபோது 4 நாட்கள் கழித்து மீண்டும் அந்த காசோலையை வங்கியில் செலுத்தும்படி கூறியுள்ளார். அதற்குள் தொகையை வங்கியில் செலுத்தி விடுவதாகவும் கூறினாராம். அதன்படி கடந்த 10.7.2015ல் மீண்டும் அந்த காசோலையை பழ முத்துநாதன் வங்கியில் செலுத்தியுள்ளார். அப்போதும் பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பழ முத்துநாதன் பரமக்குடி நீதிமன்றத்தில் சேரன், அவரது மகள் பிரியதர்சினி ஆகியோர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இன்ப கார்த்திகேயன் இதுதொடர்பாக இயக்குநர் சேரன், அவரது மகள் பிரியதர்சினி ஆகிய 2 பேரையும் வருகிற 30-ந்தேதி பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











