SAC அவர் மகன் விஜய் முக்கியம் என்றால்.. நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.. விளாசிய சேரன்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்திருந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் அவர் அளித்திருந்த பேட்டி விஜய்க்கு பெரும் வகையில் சாதகமாக அமைந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவரது பேட்டி குறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் விஜய் குறித்து பல சாதகமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் மேலும் தேர்தல் நேரத்தில் விஜய்க்கு எதிராக பலரும் முன் வைத்த விமர்சனங்களுக்கு அவர் தனது பாணியில் பதில் அளித்து இருந்தார். குறிப்பாக பத்திரிகையாளர்களைச் சந்திக்காதது ஏன்? ஒரு நாள் விட்டு ஒரு நாள் எதற்காக பிரசாரம்? அதேபோல் அவரது மனைவி முன் வைத்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்திற்கும், எஸ்.ஏ. சந்திர சேகர் பதில் அளித்திருந்தார்.
அவரது பேட்டி குறித்து, இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், " சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களை மக்களுக்கு தந்த அய்யா SA சந்திரசேகர் அவர்கள் இப்போது தனது பிள்ளையை காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் அளிக்கிறார்.

பெரும் அரசியல் பார்வை உள்ள ஒரு மனிதர் தனது மகனின் அரசியலில் தெளிவும் உழைப்பும் தொலைநோக்கு சிந்தனையும் இல்லை என தெரிந்தும், அவரை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும்.
அடுத்த தலைமுறை இளைஞர்களை அவர்களுக்கான அரசியல் புரிதலை உள்வாங்கி கற்றுக் கொடுக்காமல் வெறும் கூட்டம் காண்பிக்க பயன்படுத்தி பலனடைய நினைப்பது சரியா என யோசிக்காமல் தனது பிள்ளை என்பதால் இவரைப் போன்ற பெரும் முதிர்ச்சியானவர்கள் விஜயை காப்பாற்ற அரசியலில் ஊக்கமளித்து செய்ல்படுவது வருத்தமளிக்கிறது.

கற்றுக்கொடுங்கள் முதலில்.. தயாராக்குங்கள் அவரையும் அவர் ரசிகர்களையும்.. பின்னர் எல்லோருக்கும் நாம் தேவையா என அவரே முடிவு செய்வார்... நீங்கள் இந்த சமூகத்துக்கு எந்த தீங்கும் விளைந்துவிட கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு... அடுத்த தலைமுறையை ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள் இவர்கள்... SAC அய்யாவிற்கு அவர் பிள்ளை முக்கியமெனில் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம்... சிந்தியுங்கள் மக்களே" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications