அதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி!
சென்னை: திரையரங்க பிரமாண்டம் கடந்த 5 மாதங்களாக முடங்கி கிடப்பது பற்றி இயக்குனர் சேரன் ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
இருந்தும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சினிமா தியேட்டர்கள்
இந்த கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடி கிடக்கின்றன. படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடும் சிக்கலில் உள்ளனர். எப்போது சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது.

ஒடிடி தளங்கள்
இதற்கிடையே ஒடிடி தளங்களில் படங்கள் ரிலீஸ் ஆகிவருகின்றன. பெரும்பாலான தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய ஓடிடி-யை நாடியுள்ளனர். சில படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இன்னும் பல படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதற்கிடையே, பிரபல இயக்குனர் சேரன், அகன்ற திரையில் (தியேட்டரில்) படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா? என்று ரசிகர்களிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர்
இதற்கு பலர் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவர் கூறியிருப்பதாவது: சிவாஜி, எம்.ஜி.ஆர் என விசில் அடித்து படம் பார்த்து ரஜினி, கமல் என கட் அவுட் வைத்து, விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கி கிடக்கிறது. நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடி தீர்த்த மக்கள், கைபோனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்து பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள்.

மக்கள் கருத்து என்ன?
எதிர்கால திரையுலகப் பயணம் எந்த திசை என கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது இன்டஸ்ட்ரி. இதில் மக்களின் கருத்து என்ன? அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா? திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்? என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.

கருத்துதான் கேட்டேன்
இதற்கு பல ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒருவர், 'ஒரு நிலைபாட்டுல இருங்க சேரன், கொஞ்ச காலத்துக்கு முன்னாடி, நீங்க தான D2H ஆரம்பிசீங்க. இப்போ அதான் OTT' என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சேரன், நான் எந்த முடிவையும், எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் சொல்லவில்லையே..கருத்துதான கேட்டேன்..என் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான்..

அதுக்கு 1008 பக்கம்
மக்கள் விரும்பும் தளங்களில் சினிமா பார்க்க வசதி இருக்கவேண்டும். அது தியேட்டராகவும் இருக்கலாம். மற்றவையாகவும் இருக்கலாம் என்று சேரன் கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், 'உங்களுடைய D2H வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் ?' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சேரன், 'அதுக்கு 1008 பக்கம் இருக்கு சார்.. இப்போ அது வேணாம்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











