பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரம்… திரைப்பிரபலங்கள் ஆவேசம் !
சென்னை : சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளி பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு பாடகி சின்மயி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் பாலியல் புகார்
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி காமர்ஸ் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து எழுதிய புகார் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சினிமாவுக்கு வா
ஊரடங்கு காலத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக வந்த ஆசிரியர், கேமிரா முன்பாக வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸப்பில் மாணவிகளின் போட்டோவைப் பார்த்து, "Very cute" என்றும் அவர்களுடைய தோற்றம் குறித்தும் கருத்துத் தெரிவித்து வந்திருக்கிறார். மாணவிகளை சினிமாவுக்குஅழைத்ததாகவும் புகார்கள் வந்துள்ளன.

சிறையில் அடைக்க வேண்டும்
இந்நிலையில் PSBB பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியரை கண்டித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். அதில், PSBB உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் வழக்குத் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள், கௌரவம் மற்றும் குடும்ப மரியாதை என்று பயந்து இதை மூடிமறைத்துவிடுகிறார்கள். இது குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ராஜகோபால் , ரமேஷ் பிரபா போன்றவர்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக சிறையில் அடைக்க வேண்டும் என பாடகி சின்மயி கூறியுள்ளார்.

மனம் உடைந்து விட்டது
அதேபோல பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில், பாலியல் துன்புறுத்தல்களை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியாது. காமர்ஸ் ஆசிரியரை பற்றி கேட்கும் போது மனம் உடைந்து விட்டது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், தைரியமாக முன்வந்து புகார் அளித்த அனைத்து பெண்களையும் அவர்களின் தைரியத்தையும் நான் அன்போடு பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











