அமைச்சரைச் சந்தித்த வேடன்.. கோபத்தில் கொதித்த சின்மயி.. டிவிட்டர் போஸ்ட்டை கவனிங்க!
சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ராஜ் மோகனை பிரபல பாடகர் வேடன் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இது தொடர்பாக பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான அதே நேரத்தில் காட்டமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில்," பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆண்களுக்கு முந்தைய அரசுகளும், அமைப்புகளும் மேடை அமைத்துக் கொடுத்ததைப்போல, தற்போதைய முதலமைசச் விஜய் (தமிழக வெற்றிக் கழகம்) மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் போன்றவர்கள் செய்துவிடக் கூடாது என்று நம்புகிறேன்.
கொரோனா காலகட்டத்தின் போது, கோவிந்த் வசந்தா, முஹ்சின் பராரி, வேடன் (Vedan) மற்றும் நான் ஆகியோர் இணைந்து ஒரு பாடல் உருவாக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதுதொடர்பான ஒரு மலையாள கிளப்ஹவுஸ் (Clubhouse) விவாதத்தில் நான் பங்கேற்றபோது, ஒரு பெண் என்னிடம், "பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வேடன் உடன் நீங்கள் எப்படி இணைந்து பணியாற்றலாம்?" என்று கேள்வி எழுப்பினார்.

அந்தச் சமயத்தில் அதுகுறித்த செய்திகள் அனைத்தும் மலையாளத்தில் மட்டுமே வந்திருந்ததால், எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதன் பிறகு, தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டு வேடன் ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நாங்கள் திட்டமிட்டிருந்த அந்தப் பாடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் முற்றிலும் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகும் வேடன் மீது பல பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். "சமூக செயல்பாடுகளை ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக்கொண்டு, பெண்களின் ஒப்புதல் இன்றி அவர்களிடம் எல்லையை மீறும் ஆண்களின் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது."
இதன் காரணமாக, வேடன் பங்கேற்கவிருந்த பல இசை நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து நிராகரித்தேன். இதனால் எனக்குப் பல வாய்ப்புகளும், பெரும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டன. இருப்பினும் என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன்.

ஆதரவு இல்லை: ஆனால், இங்குள்ள நிதர்சனமானப் பிரச்சினை என்னவென்றால், இதுபோன்ற சமூகக் குழுக்களில் இருக்கும் பெண்கள், வேடன் போன்ற ஆண்களுக்கு எதிராகக் குரல் எழுப்பும்போது அவர்களுக்கு எந்தவித ஆதரவும் கிடைப்பதில்லை. அவர்கள் முற்றிலும் தனித்து விடப்படுகிறார்கள். ஏனெனில், குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் வெளியில் ஒரு 'ஹீரோ'வாகவும், 'தலைவர்'களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். மேலும், 'சமூகத்தின் பொது நன்மைக்காக' பெண்கள் இவர்களின் அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதும்: ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இதுபோன்ற சில ஆண்கள், உண்மையில் தாங்கள் எதை எதிர்த்துப் போராடுகிறோம் என்று கூறுகிறார்களோ, அதே அநீதியை இழைக்கும் ஆக்கிரமிப்பாளர்களாகவே வலம் வருகிறார்கள். இனிமேலும் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது; இதுவே முடிவு" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications