இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்… விவேக்கை உச்சாணிக்கொம்பில் ஏற்றி விட்ட வசனம் !
சென்னை : நடிகர் விவேக் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமானார் .
Recommended Video
அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என இருமகள்களும் உள்ளனர்.
தமிழ் திரைத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வந்தார் விவேக்.

விவேகானந்தன்
சின்னக்கலைவாணர் என்று நாம் அனைவரும் அன்போடு அழைக்கும் விவேக்கின் முழுப்பெயர் விவேகானந்தன். கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த சிவ அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு 1961ம் ஆண்டு நவம்பர் 19ந் தேதி பிறந்தார்.

தலைமைச் செயலகத்தில் வேலை
இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் பிகாம் பட்டம் பெற்றார். பின்னர் அதே துறையில் எம்.காம் முதுகலை பட்டம் பெற்றார். சிறிது காலம் தொலைப்பேசி ஆப்ரேட்டாக பணிபுரிந்த இவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தார்.

மனதில் உறுதி வேண்டும்
சிறுவயதில் இருந்தே கலைத்துறையின் மீது தீராத பற்றுக்கொண்டு எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிடவேண்டும் என்று தீவிரமுயற்சி செய்து வந்தார். அப்போது இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைக்க. மனதில் உறுதிவேண்டும் என்ற படத்தில் சுஹாசினியின் தம்பியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உச்சம்தொட்ட வசனம்
1989ம் ஆண்டு மீண்டும் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவர் பேசிய இன்னைக்கு செந்தா நாளைக்கு பால் என்ற வசனம் இன்று வரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி விட்டது, பட்டி தொட்டி எங்கும் விவேக்கின் முகம் பரிச்சியமானது.

சின்னக்கலைவாணர்
துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவருக்கு சின்னக்கலைவாணர் என்ற பட்டமும் பெற்றார்.

பத்ம ஸ்ரீ விருது
ரன், சாமி, பேரழகன், சிவாஜி படங்களில் நடத்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும், உன்னருகே நானிருந்தால், ரன், பார்த்திபன் கனவு, சிவாஜி படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை பெற்றார். 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு இவரை கௌரவித்தது.

சமூக கருத்துக்கள்
லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருத்துபொருளாக கொண்டு அதில் சிறிது நகைச்சுவை கலந்து தனது படங்களின் வாயிலாக அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

1 கோடி மரக்கன்றுகள்
சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டிய விவேக், அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

காலமானார்
இந்நிலையில் நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4.35 மணிக்கு காலமானார். இவரது இறப்புக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்ணீர் மல்க ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். விவேக் இன்று மண்ணை விட்டு மறைந்திருந்தாலும், நீங்கள் நட்ட மரங்கள் உங்கள் பெயரை சொல்லி என்றென்றும் தென்றல் வீசும்.


Click it and Unblock the Notifications











