தாத்தாவின் நினைவாக ஸ்டூடியோ தொடங்கிய அல்லு அர்ஜுன்… தொடங்கி வைத்த சிரஞ்சீவி
ஐதராபாத்: தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் தெலுங்கு திரையுலகில் முக்கியமான தயாரிப்பாளர் ஆவார்.
இந்நிலையில், தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் நினைவாக ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ள அல்லு அர்ஜுன்.

புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன்
கடந்தாண்டு தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது. சுகுமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆக்சன் ஜானரில் புஷ்பா தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடத்திலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. 500 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அல்லு அர்ஜுன் விரைவில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

தாத்தா நினைவாக ஸ்டூடியோ
அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவில் கீதா ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகஸ்தராகவும் பெயர் எடுத்தவர். அவரின் தந்தை அல்லு ரமலிங்கய்யா தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது காமெடியால் டோலிவுட் ரசிகர்களை மகிழ்வித்த அல்லு ராமலிங்கய்யா, 2004ம் ஆண்டு காலமானார். இந்நிலையில், அவரது 100வது பிறந்தநாளான இன்று, அவர் நினைவாக ஸ்டூடியோ திறந்துள்ளார் அல்லு அர்ஜுன்.

திறந்துவைத்த மெகாஸ்டார்
'அல்லு ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோவை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி திறந்து வைத்தார். அல்லு ராமலிங்கய்யாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, ரொம்பவே நெகிழ்ச்சியாக நடந்து முடிந்துள்ளது. அல்லு ஸ்டூடியோஸை திறந்துவைத்த சிரஞ்சீவி, "அல்லு ராமலிங்கய்யா இந்த கும்பத்தின் ஆணிவேராக இருந்தார். இந்த குடும்பம் இந்த நிலைக்கு வர அவர்தான் காரணம். சில நடிகர்களுக்கு மட்டும் தான் இந்த அன்பும் மரியாதையும் கிடைக்கும். அல்லு ஸ்டூடியோஸ் லாபத்திற்காக தொடங்கப்பட்டது அல்ல, அது ராமலிங்கய்யாவுக்கான அஞ்சலி" எனக் கூறினார்.

நன்றி சொன்ன அல்லு அர்ஜுன்
சிரஞ்சீவிக்கு பின்னர் அந்நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன், "அல்லு ஸ்டுடியோவின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்காக மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் தந்தைக்கு அவரது தந்தையான ராமலிங்கய்யா மீது எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அன்பைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் இந்த ஸ்டுடியோவை கட்டியதற்கு காரணம், எங்கள் தாத்தா அல்லு ராமலிங்கய்யா காருவை கவுரவிப்பதற்கும் மரியாதை செய்வதற்கும் தான்" எனக் கூறினார். மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











