சீரஞ்சீவியைக் காணவில்லை என்று போலீஸில் மாணவர்கள் நூதனப் புகார்

பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை நடத்தி வந்தவர் சிரஞ்சீவி. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பதி தொகுதிப் பக்கமே வராமல் இருக்கிறார்.
இதனால் திருப்பதியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் திருப்பதி காவல் நிலையத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நூதன மனு ஒன்று தரப்பட்டுள்ளது.
அதில், எங்களது எம்எல்ஏ சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாகக் காணவில்லை. அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியிருந்தனர். இதைப் பார்த்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.
அத்தோடு நிற்காத மாணவர்கள், சிரஞ்சீவியைக் கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என்றும் போஸ்டர் அடித்து திருப்பதியையே அலற வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











