Peddi Chiranjeevi Review: பெத்தி சிரஞ்சீவி விமர்சனம்.. அப்பாவா உச்சி குளிர்ந்துட்டாரு போல
சென்னை: மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில், புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவான 'பெத்தி' திரைப்படம் உலகெங்கும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூன் 3ஆம் தேதி முன்திரையிடப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் மரண மாஸான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராம் சரணின் அசாத்திய நடிப்பைப் பார்த்த ரசிகர்கள், அவரது திரைப்பயணத்தில் 'மகதீரா', 'ரங்கஸ்தலம்', 'ஆர்.ஆர்.ஆர்.' வரிசையில் இந்த 'பெத்தி' திரைப்படமும் ஒரு மிகப்பெரிய மைல்கல் எனப் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த படத்திற்காக அவருக்குத் தேசிய விருதே கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், படத்தின் பிரமாண்ட வெற்றியைக் கண்டு ராம் சரணின் தந்தையும் மெகாஸ்டாருமான சிரஞ்சீவி உணர்ச்சிவசப்பட்டு ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், "நான் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்தாலும், என் மனம் முழுவதும் 'பெத்தி'யுடனே இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக சரண் இந்தப் படத்துக்காகப் பட்ட சிரமத்தையும், காட்டிய அர்ப்பணிப்பையும் நான் அருகிலிருந்து பார்த்தவன். இப்போது ரசிகர்களின் அன்பையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது, ஒரு தந்தையாகவும், சக நடிகனாகவும் எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.'பெத்தி' கதாபாத்திரத்திற்காக ராம் சரண் இரவு பகலாக மேற்கொண்ட உழைப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. அந்த கடின உழைப்புக்குக் கிடைத்த பலனே இந்த மாபெரும் வெற்றி என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
கதையைச் சிறப்பாக உருவாக்கித் திரைக்குக் கொண்டுவந்த இயக்குநர் புச்சிபாபு சனாவுக்கும், முதல் படத்தையே இவ்வளவு பிரமாண்டமாக, எந்தவித சமரசமும் இன்றி தயாரித்த விருத்தி சினிமாஸ் வெங்கட சதீஷ் கிலாருவுக்கும் சிரஞ்சீவி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் நடித்த சிவராஜ் குமார் மற்றும் 'அப்பலசூரி' கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய ஜகபதி பாபு ஆகியோரின் நடிப்பையும், ஜான்வி கபூரையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பாராட்டு மழை: இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக இருந்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் இசை, ரத்னவேலுவின் ஒளிப்பதிவு, கொல்லா அவினாஷின் கலை இயக்கம் மற்றும் நவீன் நூலியின் படத்தொகுப்பு எனத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பையும் மெகாஸ்டார் தனித்தனியே பாராட்டியுள்ளார். மொத்த படக்குழுவினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து பாராட்டி உள்ளார்.
சிரஞ்சீவியின் கவனம்: உண்மையில், படத்தின் ஆரம்பம் முதலே 'பெத்தி'யின் ஒவ்வொரு கட்டத்தையும் சிரஞ்சீவி உன்னிப்பாகக் கவனித்து வந்தார் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்றது மட்டுமின்றி, படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட சில நிதிச் சிக்கல்களையும் அவரே நேரடியாகத் தலையிட்டுத் தீர்த்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆனந்த கண்ணீர்: முன்னதாக படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோதே, அதிலிருந்த ஒரு மாஸ் வசனத்தைப் குறிப்பிட்டு, "ராம் சரண், புச்சிபாபு, ஏ.ஆர். ரகுமான் மூவரும் மிரட்டிவிட்டார்கள்" எனப் பாராட்டியிருந்தார். இப்போது படம் வெளியாகி, தியேட்டர்களில் அந்த மூவரின் கூட்டணியே பிரதானமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மகனின் இந்த இமாலய வெற்றியைக் கண்டு மெகாஸ்டார் சிரஞ்சீவி ஆனந்தக் கண்ணீரில் நனைந்துள்ளார் என அவரது எக்ஸ் தளப் பதிவைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications