'சிரு.. நீங்கள் இருந்தவரை வாழ்க்கைக் கொண்டாட்டமாக இருந்தது..' நடிகை மேக்னா ராஜ் உருக்கமான பதிவு!
சென்னை: மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த மாதம் 7 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

உயிரிழந்தார்
அவர் நடித்து வந்த நான்கு படங்களின் ஷூட்டிங், லாக்டவுனுக்குப் பிறகு தொடர இருந்தது. இந்நிலையில் இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்திய சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நான்கு மாத கர்ப்பம்
பின்னர் அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். இவர் தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

காதலின் அடையாளம்
சிரஞ்சீவி சார்ஜா மறைந்து சில நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 18 ஆம் தேதி உருக்கமான பதிவு ஒன்றை நடிகை மேக்னா ராஜ், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அதில், நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை. குழந்தையின் வடிவில், உங்களை இந்தப் பூமிக்கு மீண்டும் அழைத்து வரும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்' என்று உருக்கமாகக் கூறியிருந்தார்.

குடும்பத்தினர்
அந்தப் பதிவு வைரலானது. இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் பெரிய போட்டோவுக்கு கீழே குடும்பத்தினர் சிரித்தபடி அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர்கள் குடும்பத்தின் பெண்கள் ஒரு குரூப்பாகவும் ஆண்கள் ஒரு குரூப்பாகவும் இந்தப் புகைப்படங்களில் அமர்ந்துள்ளனர். அதில் நடிகை மேக்னாராஜ் கூறியிருப்பதாவது:

கொண்டாட்டமாக
'அன்பான சிரு, நீங்கள் இருந்தவரை வாழ்க்கைக் கொண்டாட்டமாக இருந்தது. இனியும் அப்படித்தான் இருக்கும். சோகமாக இருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். என் சிரிப்புக்கு எப்போதும் நீங்கள்தான் காரணம். நீங்கள் கொடுத்த விலைமதிக்க முடியாத பரிசு, நம் குடும்பம். அது என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் விரும்பிய படியே, அன்பு, சிரிப்பு, குறும்பு, மிக முக்கியமாகப் பாசப்பிணைப்புடன் நகர்கிறது, ஒவ்வொரு நாளும். வி லவ் யு பேபி மா! . இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











