வடிவேலு அதை செய்திருக்கவே கூடாது.. அறிவுரை கூறும் பிரபலம்
சென்னை: வ்டிவேலு அந்த விஷயத்தை மட்டும் செய்திருக்கக்கூடாது என நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் வடிவேலு. வெகுளித்தனமான நடிப்பும், இயல்பான உடல்மொழியும் கைகொடுக்க முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதன் பிறகு கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார் வடிவேலு.

சோலோவாக வென்ற வைகைப்புயல் வடிவேலு
அவர்களுடன் இணைந்து நடித்தாலும் வடிவேலுவின் தனித்துவமான நடிப்பு அவருக்கு தனியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் படத்துக்கு படம் தன்னால் முடிந்த வித்தியாசத்தை காண்பித்தார். இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும், அடுத்தவரை உருவ கேலி செய்யாமல் வடிவேலு நகைச்சுவைகளை உருவாக்குகிறார் என்ற பெயரையும் பெற்றார். அதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

வடிவேலுவின் கால்ஷீட்தான் முக்கியம்
பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்று பார்க்காமல் அனைத்து ஹீரோக்களுடனும் நடித்தார் வடிவேலு. அப்படி அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தன. பி.வாசு சந்திரமுகி படத்தை ஆரம்பித்தபோது அவரிடம் ரஜினிகாந்த், 'முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிடுங்கள்' என்று சொல்லும் அளவுக்கு வடிவேலு திரைப்படங்களில் முக்கியத்துவம் பெற்றார்.

வடிவேலுவை சுற்றிய பிரச்னைகள்
நிலைமை சிறப்பாக சென்று கொண்டிருக்க அவர் அரசியல் மேடை ஏறியதும் அவரது கிராஃப் இறங்க தொடங்கியது. ஒருகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இது ஒருபுறம் இருக்க இம்சை அரசன் 24ஆவது புலிகேசி படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கருடனும் மோதல் உருவானது. ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. ஒருவழியாக அனைத்து பஞ்சாயத்துகளும் முடிந்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் வடிவேலு. அப்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியடைந்தது. தற்போது அவர் மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்துவருகிறார்.

வடிவேலு மீது குவியும் குற்றச்சாட்டு
இந்தச் சூழலில் வடிவேலுவுடன் நடித்தவர்கள் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டி அளித்த சிஸர் மனோகர் பகவதி படத்தில் வடிவேலுவால்தான் நான் வெளியேற்றப்பட்டேன் என வெளிப்படையாக கூறியிருந்தார். அதேபோல், மயில்சாமியின் இறுதி சடங்கில் அவர் கலந்துகொள்ளாததும் விமர்சிக்கப்பட்டது.

வடிவேலுவுக்கு சித்ரா லட்சுமணனின் அட்வைஸ்
இந்நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் வடிவேலு குறித்து பேசுகையில், "வடிவேலு தாழ்ந்த நிலைக்குச் சென்றதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சிம்புதேவனின் திரைப்படத்தில் அவர் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து நடித்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற வெற்றிப்படத்தை வடிவேலுவுக்கு தந்தவர் சிம்புதேவன். அதுமட்டுமல்லாமல் வடிவேலுவை மனதில் வைத்துக்கொண்டு அந்த படத்தில் எல்லா காட்சிகளையும் மிகச்சிறப்பாக வடிவமைத்திருந்தார் சிம்புதேவன். அப்படிப்பட்ட இயக்குநரோடு வடிவேலு தொடர்ந்து படம் பண்ணியிருந்தால் நிச்சயமாக பல வெற்றித்திரைப்படங்களை அவர் தந்திருக்க முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











