தூய்மையான அன்பை பற்றி பேசும் 'சீயான்கள்'... மண்வாசனையுடன் உருவாகி வரும் கிராமத்து படம்!
சென்னை: மண்மனம் சார்ந்த படமாக உருவாகி வருகிறது சீயான்கள்.
கே.எல். புரொடக்ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரித்துள்ள படம் சீயான்கள். வைகறை பாலன் இப்படத்தை இயக்கியுள்ளார். தேனி அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் படமாக்கியுள்ளனர்.

அந்த பகுதியை சேர்ந்த 70 பேர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 70 நாட்களில் படம் பிடிக்கப்பட்டு, தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இப்படம் குறித்து பேசிய இயக்குனர் வைகறை பாலன், "நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
மேலும் அவர்கள் அனைவருக்கும் நீண்ட காலத்திற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 4 அல்லது 5 பிரபலமான முகங்கள் தவிர, அவர்கள் அனைவரும் புதியவர்கள். தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் படம் எடுத்தோம். அத்தகைய நீண்ட தூரத்துக்கு நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது, தினமும் 2- முதல் 3 மணி நேரம் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது
சீயான் என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











