'வெட்டி கொல்வேன்': விஜயசாந்தி ஆவேசம்-கைதாகிறார்?

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிகளுக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக் கட்சியின் முக்கியத் தலைவரான விஜயசாந்தி,
இடைத் தேர்தலில் நமது கட்சி தான் எல்லா தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தனி தெலுங்கானா மாநிலம் அமையும் வரை நான் ஓய மாட்டேன். தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வெட்டுவேன். நான் தெலுங்கானாவைச் சேர்ந்தவள். யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றார்.
விஜயசாந்தியின் இந்த பேச்சு தெலுங்கு தனியார் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது.
இதையடுத்து மாநில தேர்தல் அதிகாரியான சுப்பா ராவ், நடிகை விஜயசாந்தி மீது பொது மக்களை கலவரம் செய்ய தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து பஞ்சரா ஹில்ஸ் போலீஸார் விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தேர்தல் கமிஷன் விஜயசாந்திக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இந் நிலையில் விஜய்சாந்தியை கைது செய்ய ஆந்திர போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரது வீட்டருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











