தனுஷ் பள்ளியிலேயே அப்படித்தான் - நடன அமைப்பாளர் ஓபன் டாக்
சென்னை: தனுஷால்தான் பள்ளியில் காப்பாற்றப்பட்டதாக நடன அமைப்பாளர் பாபா பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். முதல் படத்திலேயே பலர் அவரை உருவ கேலி செய்தனர். இருந்தாலும் அதனையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையை மட்டும் நம்பி தொடர்ந்து படங்களில் நடித்தார்.

காதல் கொண்டேனில் கலக்கிய தனுஷ்
துள்ளுவதோ இளமை படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் தனுஷை நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்துப்போயினர். மேலும் தனுஷுக்கு ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும் அந்தப் படம் உணர்த்தியது. படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற தனுஷ், செல்வராகவன் ஆகிய இருவரின் வாழ்க்கையுமே அந்தப் படத்திலிருந்து மாறியது.

தனுஷு க்கு குவிந்த பட வாய்ப்புகள்
காதல் கொண்டேன் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திராவும் தனுஷை வைத்து படம் இயக்கினார். நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்கள் மட்டுமின்றி திருடா திருடி, சுள்ளான் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களிலும் நடித்தார். அந்த சமயத்தில் செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் நடித்ததன் மூலம் தனுஷ் கேரியரின் உச்சத்துக்கு சென்றார். அதனையடுத்து தொட்டதெல்லாம் ஹிட்டாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட், ஹாலிவுட் என நகர்ந்துவிட்டார் தனுஷ்.

பொன்னம்பலத்துக்கு தனுஷ் செய்த உதவி
சமீபத்தில் பொன்னம்பலம் அளித்த பேட்டி ஒன்றில், தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தன்னுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போதே தனுஷ் எனது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிவைத்தார். அவர் அனுப்பிய தொகை நான் கேட்டதைவிட பத்து மட்ங்கு அதிகமாக இருந்தது. அதனை எப்போது மறக்கமாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். பொன்னம்பலத்தின் பேட்டியை அடுத்து தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமில்லை சிறந்த மனிதரும்கூட என சிலாகித்துவருகின்றனர்.

தனுஷ் குறித்து பாபா பாஸ்கர்
இந்நிலையில் நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் குறித்து பேசுகையில், "பள்ளியில் நான் சரியாக படிக்கமாட்டேன். ஆனால் விளையாட்டு மற்றும் நடனத்தில் நம்பர் ஒன்னாக இருந்தேன். அதனால் என்னை பள்ளியில் வைத்திருந்தார்கள். தனுஷும் நானும் ஒரே பள்ளியில்தான் படித்தோம். அவர் படிப்பில் டாப்பாக இருப்பவர்.

தனுஷால்தான் நான் பாஸ் ஆனேன்
எனவே தேர்வு வரும்போது அவருக்கு பல உணவுகளை வாங்கி கொடுத்து அவரை நன்றாக கவனித்துக்கொள்வேன். தேர்வில் அவரை பார்த்து எழுதித்தான் நான் பாஸ் ஆனேன். எனவே எனது வாழ்க்கையில் மட்டுமல்ல என்னை பள்ளியில் காப்பாற்றியவரும் தனுஷ்தான்" என குறிப்பிட்டார். அவரது இந்தப் பேட்டி இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











