கடும் அதிர்ச்சி.. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. துரதிர்ஷ்டவசமானது.. சினிமா பிரபலங்கள் உருக்கம்!
சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 11 ராணுவ வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

தீவிர சிகிச்சை
ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.

தலைமை தளபதி மரணம்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப் படுகிறது.

10ஆம் தேதி இறுதிச்சடங்கு
இதனை தொடர்ந்து நாளை மறுநாளான 10ஆம் தேதி அவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை அவர்களின் வீட்டில் உடல்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள மயானத்தில் அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் அதிர்ச்சி
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் உருக்கமாக டிவிட்டியுள்ளனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமானது
இதேபோல் நடிகர் சரத்குமாரும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் சென்றபோது, இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்திய தேசத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி உட்பட உயர் பொறுப்பிலுள்ள இராணுவ அதிகாரிகள் இவ்விபத்தில் சிக்கியது துரதிர்ஷ்டவசமானது.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications