துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.. எங்களை யார் எடுப்பது? பிரபலங்கள் கண்ணீர்மல்க இரங்கல்!
சென்னை: குழந்தை சுஜித் உயிரிழப்பு குறித்து திரை பிரபலங்கள் பலரும் கண்ணீர்மல்க டிவிட்டி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அன்று மாலை முதலே மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
ஆனால் குழந்தையை மீட்க மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் பின்னடைவை சந்தித்தது. நவீன எந்திரங்கள் உதவியுடன் இரவு பகலாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

துர்நாற்றம்
அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் என அனைவரும் தூக்கமின்றி நான்கு நாட்களாய் குழந்தையை மீட்க போராடினர். ஆனால் நேற்றிரவு, குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்ததாக அறிவித்தார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.

நல்லடக்கம்
இதனை தொடர்ந்து காலை 4.30 மணிக்கு அழுகிய நிலையில் சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. மணப்பாறை மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு குழந்தையின் உடல் நேரடியாக பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபலங்கள் இரங்கல்
இந்நிலையில் குழந்தை சுஜித்தின் மரணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரிலும் தங்களின் இரங்கலையும் வலியையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
துயரக்குழி
சுஜித் மரணம் குறித்து நடிகர் விவேக் பதிவிட்ட டிவிட்டில்,
கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது? என உருக்கமாக கேட்டுள்ளார்.
அருகதை இல்லை
இயக்குநர் சேரன் பதிவிட்ட டிவிட்டில்,
விழிப்புணர்வுக்கு விதையானாய்..
விடைகொடுக்கக்கூட
எங்களுக்கு
அருகதை இல்லை
முடிந்தால்
மன்னித்துவிடு
இம்மண்ணில்
மகனாய் பிறப்பித்த
கடவுளை.. என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
அர்த்தமே இல்லை
நடிகர் சதீஷ் தனது டிவிட்டில் அந்த மரணக் குழியை மூடாமல் அலட்சியமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படும் வரை RIP என்பதற்கு அர்த்தமே இல்லை என தெரிவித்திருக்கிறார்.
ஓய்வெடு என் மகனே
நடிகர் யோகி பாபு பதிவிட்டுள்ள டிவிட்டில் அமைதியாய் ஓய்வெடு என் மகனே..
கடவுள் அவரது குடும்பத்திற்கு பலம் அளிக்கட்டும்
இனிமேல் ஒவ்வொரு பெற்றோரும் நம் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும், மேலும் எதிர்காலத்தில் இந்த மாதிரியான பிரச்சினைகளை கையாள நமது அரசாங்கம் புதிய யோசனைகளையும் தொழில்நுட்பங்களையும் தொடங்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
மீண்டும் இழக்கக்கூடாது
நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில் நாம் மீண்டும் ஒரு சுஜித் வில்சனை இழக்கக்கூடாது. விழிப்புணர்வு பிரச்சாரம் மிகவும் அவசரமான தேவை. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போர்வெல்ஸ் கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











