twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் நடித்த ஷோபனா தற்கொலை!

    By Sudha
    |

    Shopana
    சென்னை: நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நகைச்சுவை நடிகை ஷோபனா நேற்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது இந்த தற்கொலைக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்தவர் ஷோபனா.

    நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட நிறைய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் 'எச்' பிளாக்கில் வசித்து வந்தார்.

    நேற்று காலை 10.30 மணிkdkg தாயார் ராணி வங்கிக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷோபனா திடீரென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கதவை உள்பக்கம் சங்கிலியால் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஷோபனா உயிரை விட்டுவிட்டார்.

    வங்கிக்கு போய்விட்டு திரும்பி வந்த தாயார் ராணி கதவை நீண்டநேரம் தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகள் ஷோபனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஷோபனாவை எடுத்து சென்றனர். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, ஷோபனா ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர்.

    ஷோபனா தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷோபனாவின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.

    ஏன் இந்த தற்கொலை?

    ஷோபனா தற்கொலை செய்து கொண்டதில் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வைரம் ராணி கூறுகையில், "எங்கள் குடும்பமே சினிமா குடும்பம். நானும், நாடகம் மற்றும் சினிமாவில் நடித்துள்ளேன். எனது கணவர் ஜெயராமனும் நாடக நடிகர்தான். எனது மூத்த மகள் ஆனந்தி, டைரக்டர் குருசங்கரை மணந்துகொண்டு தியாகராய நகரில் தனியாக வசிக்கிறாள். ஷோபனா எனக்கு 2-வது மகள். பி.காம். பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். 15 வயதிலிருந்தே அவள் நாடகங்களில் நடித்து வந்தாள்.

    மீண்டும் மீண்டும் சிரிப்பு...

    வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சினிமாவிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறாள். நடிகர் வடிவேலுவுடனும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளாள். 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' என்ற டி.வி. சீரியலில் வெண்ணிற ஆடைமூர்த்தியோடு நடித்து ஷோபனா பிரபலமானாள். 'ஜில்லுன்னு ஒரு காதல்', 'சுறா' உள்பட 100 படங்களில் நடித்துள்ளாள். 'இளைஞன்', சிறுத்தை' உள்பட அவள் நடித்துள்ள இன்னும் 10 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. 'மாமா மாப்ளே' டி.வி. தொடரிலும் ஷோபனா நடித்துக் கொண்டிருந்தாள்.

    காதல் ஏமாற்றம்...

    ஒரு ஆள் காதலித்து திருமணம் செய்வதாக கூறிவிட்டு, ஷோபனாவை ஏமாற்றிவிட்டான். அது, அவளுடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது.

    நான் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஷோபனா இனிமேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். 'சிக்குன்குனியா' நோயால் பாதிக்கப்பட்டு அவள் அண்மையில் மிகவும் கஷ்டப்பட்டாள். சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு கூட அவளால் போக முடியவில்லை. என் மகள் மிகவும் நல்லவள். சினிமாவில் நடித்தாலும்கூட அவள் எந்த தப்பும் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.

    அவளுடன் நடிக்கும் சக நடிகர்-நடிகைகள் மிகவும் நல்ல பெண் ஷோபனா என்று தான் பாராட்டுவார்கள். சினிமா, டி.வி. தொடரில் நடிப்பதற்காக ஷோபனாவுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி காசோலையாகத்தான் தருவார்கள். அதுபோல கிடைத்த ஒரு காசோலையை வங்கியில் போடுவதற்காக நான் காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள வங்கிக்கு போனேன். நான் போகும்போது ஷோபனாதான் எனக்கு 2 தோசை சுட்டுக்கொடுத்தாள். டீயும் போட்டுக்கொடுத்தாள். அப்போது அவளுடைய மனதில் எந்தவித சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.

    சமையலுக்கு கீரை வாங்கி வைத்திருந்தோம். அந்த கீரையை நறுக்கி வேகவைத்துவிட்டு நான் குளிக்க போகிறேன். அதற்குள் நீங்கள் வந்துடும்மா, என்று ஷோபனா சிரித்துக்கொண்டே என்னை வங்கிக்கு அனுப்பி வைத்தாள்.

    ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்? என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை..."

    -இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.

    போலீசார் தீவிர விசாரணை

    ஷோபனா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோபனாவின் சோக முடிவுக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ஷோபனாவின் வீட்டிலிருந்து ஒரு டைரியை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஷோபனா என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஷோபனாவின் தாயார் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவும் போய்விட்டால் தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஷோபனாவின் திடீர் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்திலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Comedy actress Shobana, popularly known for her role in Meendu Meendum Sirippu with Vennira Aadai Murthy, committed suicide by hanging herself at her Kotturpuram residence in Chennai on Monday (Jan 9, 2011). Shobana (31) has acted as a comedienne in several films and television serials including, ‘Lollu Shaba’ and many other serials. Her role in Sillunnu Oru Kaadhal with with Vadivelu was also very popular.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X